பவுடர் பூசி குர்தா மாட்டி கொஞ்சம் நடிங்க பாஸ் .. மோடியை கிண்டலடிக்கும் திருச்சி காங்.
நரேந்திர மோடி போகிற இடங்களில் இந்திய வரலாற்றை தவறாக உளறுகிறார் என்றும், அவருக்கு பாஜக, வரலாறு டியூஷனை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கிண்டலடித்திருந்தார்.
இதையடுத்து திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட விவசாய பிரிவு தலைவர் முரளிதரன் தலைமையில் காங்கிரஸார் சிலர், இன்று மோடிக்கு வரலாற்று புத்தகங்களை தபாலில் அனுப்பும் ஸ்டண்ட் போராட்டத்தை நடத்தினர்.
திருச்சி தபால் நிலையத்திற்கு வந்த அவர்கள், ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆங்கில வழிக்கல்வி வரலாறு பாடபுத்தகங்கள் இருந்தன. அவற்ற பார்சல் செய்த அவர்கள், நரேந்திர மோடியின் குஜராத் முதல்வர் அலுவலகத்துக்கும், அவரது இல்லத்திற்கும், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலக முகவரி உள்ளிட்ட மூன்று முகவரிக்கும் விரைவு தபாலில் அனுப்பினர்.
பின்னர் முரளிதரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து மோடி இந்தியா முழுவதும் பிரச்சாரத்திற்கு செல்கிறேன் என்கிற பெயரில் வரலாற்று உண்மைகளை தப்புதப்பாக உளறிக் கொட்டுகிறார் என்பது நாடறிந்த உண்மை. இப்படி வரலாறு தெரியாதவர் கையில் இந்த தேசம் சிக்கினால் என்னவாகும் என்பதை யோசித்துபாருங்கள்.
மோடிக்கு பவுடர் பூசி குர்தா மாட்டிவிட்டு கொஞ்சம் நடிங்க பாஸ் என அழைச்சிக்கிட்டுவர்ற ஆர்.எஸ்.எஸ் கும்பல், கொஞ்சம் வரலாற்றை படிங்க பாஸ்ன்னு சொல்லாததன் விளைவாகத்தான் மோடி உளறுகிறார். அவரின் பேச்சு மக்களை முட்டாளாக்கும் முயற்சி. அதனால்தான் மோடி வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும் என்பதற்காக ஆங்கில வழிக்கல்வியிலான வரலாறு புத்தகங்களை மோடிக்கு மூன்று விலாசத்துக்கு அனுப்புகிறோம். எப்படியும் சில நாட்களில் ஏதாவது ஒரு புத்தக பார்சல் மோடி கையில் கிடைத்துவிடும் என்றார்.