புயலைக் கிளப்பும் சூர்யா சிவா! அனல் பறக்கும் பதிவுகள்! உருளும் பாஜக தலைகள்?
கடந்த 12 ஆம் தேதி ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தமிழிசை செளந்தரராஜன் வீடியோ ஒன்று திடீரென்று வைரலானது. இந்த விழா மேடையில் அமர்ந்திருந்த பாஜக மூத்த தலைவர்களுக்கு மரியாதை நிமித்தமாகத் தமிழிசை வணக்கம் செல்லிக் கொண்டே நகர்ந்தார்.
முதலில் மேடையிலிருந்த வெங்கையா நாயுடுவைப் பார்த்து வணங்கிய தமிழிசை, அவரது பக்கத்திலிருந்த அமித்ஷாவைப் பார்த்து வணங்கினார். உடனே அமித்ஷா கண்டிப்பான தோரணையில் தமிழிசையை அருகில் அழைத்தார். அருகே சென்ற தமிழிசை ஏதோ விளக்கம் அளித்தார். அதைக் காதில் வாங்கிக் கொள்வதற்கு முன்பே கடுகடுப்பான முகத்துடன் தமிழிசையைப் பார்த்து சைகை செய்தார் அமித்ஷா. அவரது முகத்தில் கடும் கோபம் தெரிந்தது. முடியாது முடியாது என்பது போல் அவரது உடல்மொழியும் வெளிப்பட்டது.

குளோஸ் அப் ஷாட்டில் ஊடகங்கள் உடனே அவரை ஃபோகஸ் செய்ய தொடங்கின. அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. உடனடியாக அண்ணாமலை மோதல் குறித்துத்தான் அமித்ஷா கண்டித்திருக்கிறார். அவர் அண்ணாமலை ஆதரிக்கிறார் என்பது போன்ற ஊகங்கள் வெளியாகின. அடுத்த நாள் தமிழிசையை நேரடியாகப் போய் அவரது வீட்டில் சந்தித்தார் அண்ணாமலை. சர்ச்சை சமாதானத்தில் முடிந்தது என்று சொல்லப்பட்டது. ஆனாலும், இப்போது திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 'பாஜகவில் அண்ணாமலை நிறைய ரெட்டிகளைச் சேர்த்து வருகிறார். இதை நாங்கள் சொல்லவில்லை. பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தான் சொல்லி இருக்கிறார்' என்று அடிக்கடி எடுத்துக் காட்டி பேசி வருகின்றனர். சமீபத்தில் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னையன் கூட இப்படிப் பேசி இருந்தார்.
பாஜகவில் இந்தச் சர்ச்சை பற்றி யாரும் வாய் திறந்து பதில் சொல்லவில்லை. தமிழிசை கூட, அமித்ஷா தேர்தல் பிரச்சாரங்கள் பற்றியே தன்னிடம் பேசினார் என்று விளக்கம் அளித்திருந்தார். அதன்பின்னர் அண்ணாமலைக்கும் தமிழிசைக்குமான உட்கட்சி மோதல் பெரியதாக வெளியே வரவில்லை. ஆனால், பாஜகவிலிருந்து கடந்த 20 ஆம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்ட சூர்யா சிவா, தொடர்ந்து பாஜக பற்றிய உட்கட்சி விவகாரங்களை அவரது எக்ஸ் பக்கத்தில் போட்டு அம்பலப்படுத்தி வருகிறார். கூடவே தமிழிசையை அவர் தொடர்ந்து விமர்சித்தும் வருகிறார்.

சில ஆண்டுகள் முன்னதாக பாஜக மாநிலத் தலைவராக தமிழிசை செளந்தரராஜன் இருந்த போது, விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரது மகன் 'பாஜக ஒழிக' என்று பின்னால் நின்று சத்தம் போட்டார். அந்த வீடியோ வைரலாக பரவியது. அதை இப்போது எடுத்துப் போட்டு, சூரியா விமர்சித்துள்ளார். 'பாஜக ஒழிக என்று நான் சொல்லவில்லை. அக்கா உங்க பையன் தான் சொல்கிறார் ' அதில் ஜாடையாக விமர்சித்துள்ளார்.
நேற்றைய ஒரு பதிவில் சூர்யா, "உண்மையான தொண்டனை அடையாளம் காண முடியாதவர், உண்மையான தலைவனாக இருக்க முடியாது. கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கெஞ்சுவதற்காக இந்த பதிவுகள் இல்லை. நீங்கள் என்ன,என்னை வேண்டாம் என்று சொல்வது, நான் கூறுகிறேன் எனக்கு பாஜக வேண்டாம். வேண்டவே வேண்டாம்" என்று பொங்கி இருந்தார்.

இன்று மீண்டும் முக்குலத்தோர் சமுதாயத்தை எதிர்க்கும் பாஜகவைக் கண்டிக்கிறோம் என்று ஒரு பதிவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். மேலும் 'பிஜேபியால் பாதிக்கப்பட்ட முக்குலத்தோர் சமூகத்தை சார்ந்த ஆயிரக்கணக்கான நிர்வாகிகளை மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைத்து மாபெரும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்" என்றும் மிகக் காட்டமாகக் கூறியுள்ளார்.
இரண்டு நாட்கள் முன்னதாக ஒரு பதிவைப் போட்ட சூர்யா அதில், "அக்கா உங்களை மறந்துவிட்டேன் என்று நினைக்காதீர்கள். கண்டிப்பாக உங்களுக்கான முக்கியத்துவம் பாஜக கொடுக்கவில்லை என்றாலும் என் மனதில் கண்டிப்பாக உண்டு. புதுவை பாஜகவை அழித்தது பத்தாது என்று இப்போது தமிழ்நாட்டு பாஜகவிலும் களம் இறங்கி அழித்துக் கொண்டிருக்கும் உங்களை மறப்பேனா? உங்கள் நீண்ட ஊழல் பட்டியலை பாண்டிச்சேரியில் எடுத்து தொகுப்பதற்கு கொஞ்சம் தாமதம் ஆகிறது. விரைவில் பட்டியலோடு சந்திக்கிறேன். வருத்தம் வேண்டாம் அக்கா" என்று தமிழிசையைக் குறிப்பிட்டு எழுதி இருந்தர்.
கடந்த 22 ஆம் தேதி போட்ட பதிவில், "திமுகவின் முதல் குடும்பத்தைக் குற்றம் சுமத்தி யோக்கிய வேடம் போட்டுவிட்டு , மணல் கடத்தல் கும்பலிடம் மாதம் 50 லட்சத்திலிருந்து 80 கோடி வரை ஆட்டை போடும் பாஜக பிரமுகர்கள் பட்டியல் ஆன் தி வே.. Countdown Starts.." என்றும் கூறியிருந்தார்.

முதலில் ஊழல் மணல் கடத்தல் கும்பலிடம் மாதம் 50 லட்சம் பெறுவதாகச் சொல்லி இருந்த சூர்யா, அதன்பின்னர் தமிழிசை ஆளுநராக பாண்டிச்சேரியில் செய்த ஊழல் பட்டியலை திரட்டி வருவதாகக் கூறியிருந்தார். அப்படி என்றால் இந்த மணல் கடத்தல் பதிவுக்கும் தமிழிசை பற்றிய பதிவுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஆனால், மணல் கடத்தில் பதிவில் பாஜகவினர் பட்டியல் விரைவில் எனக் குறிப்பிட்டுள்ளார் சூர்யா. ஆக, அது ஒரு நபர் சார்ந்த விவகாரம் இல்லை என்று புரிந்து கொள்ள முடிகிறது. அவர் பொதுவாகக் கமலாலயம் படத்தைத்தான் அதில் பயன்படுத்தி இருக்கிறார். அப்படி என்றால், அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் யார்? அவர்கள் எவ்வளவு லஞ்சம் பெற்றனர் எனப் பல கேள்விகள் முளைக்கின்றன.
கட்சியை விட்டு நீக்கப்பட்ட அன்று சூர்யா போட்ட பதிவில், "அண்ணன் அண்ணாமலை அவர்களால் ஈர்க்கப்பட்டுதான் நான் தமிழ்நாட்டு பாஜகவில் இணைந்தேன். என் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் தலைவனைப் பேசியதற்கு நான் பதில் அளித்தேன், அதற்காக என்மேல் நடவடிக்கை என்றால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.
ஆனால், அதன்பின்னர் பலரது மகிழ்ச்சிக்குத் தொடர்ந்து வேட்டு வைத்து வருகிறார்.












Click it and Unblock the Notifications