டி.டி.வி தினகரனின் அமமுக கட்சி விரைவில் செயல் இழந்து இழந்து போய்விடும் : ஜெ.தீபா உறுதி
டி.டி.வி தினகரனின் அமமுக கட்சி விரைவில் செயல் இழந்து இழந்து போய்விடும் என்று ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டிணம் : டி.டி.வி தினகரன் ஆரம்பித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சி விரைவில் செயல் இழந்து போய்விடும் என்று எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டிணம் மாவட்டத்தின் சீர்காழியில், எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் சார்பாக எம்.ஜி.ஆர் 101வது பிறந்தநாள் விழா மற்றும் ஜெயலலிதா 70வது பிறந்தநாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழக வரலாற்றில் கரை படிந்த ஒரு நிகழ்வாகும். ஜனநாயக ஆட்சியில் இப்படி ஒரு மோசமான சம்பவம் எங்குமே நடைபெற்றது இல்லை.
அரசுக்கு மக்களின் போராட்டத்தை கையாளத் தெரியாததை இந்த சம்பவம் காட்டுகிறது. பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்ட இந்தப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது கண்டனத்திற்குரியது.
எனவே, இந்த மக்கள் விரோத ஆட்சி உடனடியாக கலைக்கப்பட வேண்டும். நீட் தேர்வினால் கடந்த ஆண்டு அனிதா, இறந்தபோதே நீட் தேர்வை ரத்து செய்ய எடப்பாடி அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால், இப்போது பிரதீபா, சுபஸ்ரீ என தொடர்ந்து மரணங்கள் ஏற்பட்டுள்ள நிலையிலும் இது குறித்து அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மோடி அரசு தமிழகத்தை ஆளத்துடிக்கும் எண்ணத்திற்கு இந்த ஆட்சியாளர்கள் துணை போகிறார்கள்.
டி.டி.வி தினகரன் ஆரம்பித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சிக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தொண்டர்பலம் இல்லாத அந்தக் கட்சி விரைவில் செயல் இழந்து போய் விடும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications