தினகரன் ஏன் "சித்தி"யைப் பார்க்கலை தெரியுமா.. அட மேட்டரே வேறயாம்ல!
பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்திக்க சென்ற தினகரன், சந்திக்காமல் தலைதெறிக்க சென்னை திரும்பியதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
சென்னை: பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்திக்க சென்ற தினகரனை டெல்லி போலீஸார் கண்காணித்ததால், அவரை சந்திக்காமல் தலைதெறிக்க சென்னை திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா மறைந்த பிறகு கடந்த 4 மாதங்களாக அதிமுகவினர் இரு கோஷ்டிகளாக பிரிந்து கிட்டத்தட்ட எதிர்க்கட்சிகள் போல் செயல்பட்டு வந்தனர்.
இ்ந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் செய்ய இரு கோஷ்டிகளும் இரட்டை இலைக்கு சொந்தம் கொண்டாடி தேர்தல் ஆணையத்தை நாடியதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

காசு மழை
இதைத் தொடர்ந்து அதிமுக அம்மா கட்சி வேட்பாளராக ஆர்கே நகர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்து கடும் களப்பணியாற்றினார். இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று எடப்பாடியின் இடத்தை பிடிக்க கனவு கண்டார் தினகரன். இதனால் வாக்காளர்களுக்கு பகிரங்கமாக பணம் கொடுத்தல், கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டதால் அவருக்கு நெருக்கமான விஜயபாஸ்கரின் வீட்டிலும், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த சரத்குமாரின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இரட்டை இலையை மீட்க
இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது. பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாக, இரட்டை இலை சின்னத்தை பெற குறுக்கு வழியில் யோசித்து தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் அளிக்க முயற்சித்த வழக்கில் சிக்கினார்.

கைது செய்ய தீவிரம்
இந்நிலையில் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சுகேஷிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தினகரனிடம் சம்மன் அளிக்க டெல்லி போலீஸ் சென்னையில் முகாமிட்டுள்ளது. மேலும் தினகரனுக்கு எதிரான சுகேஷுடன் அவர் பேசிய ஆடியோ ஆதாரங்கள் சிக்கியுள்ளதால் சம்மன் கொடுத்தவுடன் அவரை டெல்லி அழைத்து சென்று விசாரித்து கைது செய்யலாம் என்று தெரிகிறது. எனினும் அவர் கொடுத்த பணம ஹவாலா என்பதாலும், அது சென்னையிலிருந்து டெல்லிக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாலும் சுகேஷை சென்னை அழைத்து வந்து தினகரன் முன்பு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சசிகலா அதிருப்தி
இரட்டை இலை சின்னம் முடங்கியது, ஆர்கே நகருக்கு தினகரன் வேட்பாளராக அறிவிப்பு, தொப்பியின் சின்னம் தேர்வு, பணப் பட்டுவாடா, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் உள்ளிட்டவற்றால் தினகரன் மீது சசிகலா கடும் அதிருப்தியில் இருப்பதால்
தன்னை சந்திக்க பெங்களூர் சிறைக்கு வந்த தினகரனை சந்திக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்து திருப்பி அனுப்பியதாக தகவல்கள் வெளியாகின.

உண்மை வேறு
ஆனால் தினகரன் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளதால், அங்கு தப்பி செல்லலாம் என்பதால் டெல்லி போலீஸ் கண் கொத்தி பாம்பாக கண்காணித்து வருகிறது. அந்த வகையில் பெங்களூருக்கு தினகரன் செல்வதை அறிந்த டெல்லி போலீஸ், அச்சமயம் தினகரனையும், சுகேஷையும் இணைத்த மற்றொரு தரகரை தேடி பெங்களூர் வந்தனர். அப்போது பரப்பன அக்ரஹார சிறை பகுதியில் தினகரனை கண்காணித்ததை அறிந்ததும் எங்கே தூக்கி விடுவார்களோ என்று பயந்து போய்த்தான் தினகரன் அந்தப் பக்கமே வரவில்லையாம்.












Click it and Unblock the Notifications