எடப்பாடி பழனிச்சாமியுடன் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு- பரபர பின்னணி
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியுள்ளனர்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.தங்கத் தமிழ்செல்வன், தளவாய் சுந்தரம் ஆகியோர் தலைமைச்செயலகத்தில் அரை மணி நேரமாக ஆலோசனை நடத்தினர்.
ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று முக்கிய அறிவிப்பு வெளியிடுவேன் என்று டிடிவி தினகரன் கூறியிருந்தார். கட்சியின் துணை பொதுசெயலாளர் என்ற முறையில் கட்சியை வலுப்படுத்த சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப் போவதாகவும் கூறினார் டிடிவி தினகரன்.
அதிமுகவின் கட்சி தலைமை அலுவலகத்துக்கு செல்லப் போவதாக டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். ராயப்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்தில், இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்துகின்றனர்.
கட்சியை வழிநடத்தும் பொறுப்பு தனக்கு இருப்பதாகவும் ஆகஸ்ட் 5 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப் போவதாகவும் கூறினார் தினகரன். இதனையடுத்து அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை ஒன்றை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இதனிடையே டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கத்தமிழ் செல்வன், முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தனர்.
டிடிவி தினகரனின் நடவடிக்கைகள் பற்றி அவரது ஆதரவு எம்.எல்.ஏ.விடம் எடப்பாடி எடப்பாடி கேட்டறிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது டிடிவி தினகரன் கூறிய கருத்துக்களை முதல்வரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலையில் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.