தினகரனின் அதிமுக்கிய விவகாரங்களை டெல்லி போலீசில் போட்டு கொடுத்தது ஜெகஜால ஜெயா டிவி 'ஜனா'?
தினகரனுக்கு வலது கரமாக இருந்து வரும் ஜெயா டிவி ஜனாவிடம் இருந்துதான் அதிமுக்கிய விவகாரங்களை டெல்லி போலீஸ் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்கிய டிடிவி தினகரன் பற்றி அதிமுக்கிய விவகாரங்களை அவரது உதவியாளர் ஜெயா டிவி ஜனாவிடம் இருந்தே டெல்லி போலீஸ் கறந்துள்ளதாக கூறப்படுகிறது.
சசிகலா சிறை செல்லும் போது டிடிவி தினகரனை துணைப் பொதுச் செயலாளராக நியமித்துவிட்டு சென்றார். அந்தப் பதவிக்கு தினகரன் வந்த உடனேயே மாயமாகி இருந்த ஜெயாடி ஜனா மீண்டும் வெளியே தலை காட்ட ஆரம்பித்தார்.
தலைமறைவு
ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே அவரின் கோபத்திற்கு ஆளான ஜெயாடிவி நிர்வாகிகளில் ஜனாவும் ஒருவர். அதனால் ஜெயலலிதா முதல்வராக உயிரோடு இருக்கும் வரை வெளி உலகிற்கு வராமல், திரை மறைவில் தினகரனுக்கு 'அனைத்துமான' உதவிகள் செய்துவந்தார். அந்தக் காலங்களில் தினகரனே வெளியே வராமல் ஜெயலலிதா கண்ணில் படாமல்தான் இருந்தார்.
முதல் அழைப்பு
அதிமுக துணைப் பொதுச் செயலாளர் ஆனதும் தினகரனின் முதல் அழைப்பு சென்றது ஜெயா டிவி ஜானாவுக்குத்தான். உடனே தனது வேலைகளை ஆரம்பித்தார் ஜனா.
தினகரனின் நிழல்
மீடியாக்களை ஒருங்கிணைப்பது, பிரஸ் ரிலீஸ் ரெடி செய்ய தனி டீம் என தினகரனுக்கு நிழலாக வலம் வந்தார் ஜனா. கடந்த 70 நாட்களுக்கும் மேலாக டிடிவி தினகரனுடன் இருந்து வந்த ஜனா, இப்போது டெல்லி போலீஸ் வளையத்தில் சிக்கியிருக்கிறார்.
போட்டு கொடுத்தார் ஜனா?
இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் அதிகாரிகளை ரூ.50 கோடிக்கு விலை பேசிய வழக்கில் ஜனாவுக்கும் தொடர்புள்ளது என்று சந்தேகிக்கிறது டெல்லி போலீஸ். இதனால் அவரை டெல்லிக்குத் தூக்கிச் சென்று விடிய விடிய தனி பாணியில் விசாரித்து பல அதிமுக்கிய விவகாரங்களை கறந்துவிட்டதாம். இதனடிப்படையில்தான் தினகரனின் மனைவி அனுராதாவிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள் என்கிறது போலீஸ் வட்டாரங்கள்.
ஆனால் டெல்லி பத்திரிக்கையாளர்களிடம் ஜனா,'தினகரன் மேல் இருக்கும் வழக்கு எல்லாம் ஜோடிக்கப்பட்ட ஒன்று.அவருக்கு டெல்லி ஒன்றும் புதியதில்லை.அவரால் வெளியே மீண்டு வரமுடியும்' என்று முன்பே தெரிவித்துள்ளார்.
ஜனா, தினகரனைக் காப்பாற்றினாரா அல்லது சாய்த்தாரா என்பது போகப் போகத் தெரியும்.