பரோலில் வரும் சசிகலா எங்கு தங்குவார்?... தினகரனுடன் சிறை துறையினர் ஆலோசனை?
பரோலில் வெளியே வரும் சசிகலாவை அழைத்து வருவதற்காக தினகரன் பெங்களூர் புறப்பட்டு சென்றார்.
சென்னை: பரோலில் வெளியே வரும் சசிகலாவை அழைத்து வருவதற்காக பெங்களூர் செல்லும் தினகரனிடம் சசிகலா எங்கே தங்குவார் என்ற விவரங்களை காவல் துறையினர் ஆலோசனை நடத்துவர் என தெரிகிறது.
சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அண்மையில் உறுப்பு மாற்று சிகிச்சை நடைபெற்றது.

கணவரை காண சசிகலா பரோலில் வர விண்ணப்பத்திருந்தார். அதில் தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளதாக சிறை துறை நிர்வாகம் தெரிவித்துவிட்டது. இதை தொடர்ந்து சசிகலா மீண்டும் பரோலுக்கு விண்ணப்பித்தார்.
இதனிடையே சசிகலா பரோலில் வர எந்த வித ஆட்சேபமும் இல்லை என சென்னை காவல் துறை தடையில்லா சான்றிதழ் வழங்கினால் மட்டுமே அவரது பரோல் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைத் துறை கண்காணிப்பாளர் சோமசுந்தர் தெரிவித்திருந்தார்.
சசிகலா பரோலில் வருவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சென்னை காவல் துறையினர் சரிபார்த்து வருவதாக தகவல்கள் கூறப்பட்டன. இந்நிலையில் தினகரன் சென்னையிலிருந்து திடீரென பெங்களூர் புறப்பட்டு சென்றார்.
இதனால் சசிகலாவுக்கு இன்று அல்லது நாளை பரோல் கிடைக்கலாம் என தெரிகிறது. மேலும் சசிகலா சென்னை வந்தால் அவர் எங்கு தங்குவார் என்பது குறித்தும் சிறை துறையினர் தினகரனிடம் ஆலோசனை நடத்துவர் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications