சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததை டிடிவி தினகரனே ஒப்புக்கொண்டுள்ளார்.. நடிகர் ஆனந்த்ராஜ்
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தாம் லஞ்சம் கொடுத்ததை டிடிவி தினகரனே ஒப்புக்கொண்டுள்ளார் என நடிகர் ஆனந்த்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தாம் லஞ்சம் கொடுத்ததை டிடிவி தினகரனே ஒப்புக்கொண்டுள்ளார் என நடிகர் ஆனந்த்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் ஆர்கே.நகர் தொகுதியில் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஆர்கே நகரில் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் எல்லாம் எங்கே இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா உயிரோடிருந்தபோது அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்தவர் நடிகர் ஆனந்த்ராஜ். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா கையில் அதிமுக செல்வதை பகிரங்கமாக எதிர்த்து கட்சியில் இருந்து வெளியேறினார்.
எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவால் ராணுவ கட்டுக்கோப்புடன் பாதுகாக்கப்பட்ட அதிமுக ஒரு குடும்பத்தின் பிடியில் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆனந்த்ராஜ் தனது பேட்டியின் போது வெளிப்படையாக தெரிவித்தார்.
தினகரனே ஒப்புக்கொண்டுள்ளார்
இந்நிலையில் நடிகர் ஆனந்த் ராஜ் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இரட்டை இலைச்சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்திருப்பதை டிடிவி தினகரனே ஒப்புக்கொண்டுள்ளார் என அவர் கூறினார்.
இந்த பணமெல்லாம் எங்கிருக்கிறது?
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 100 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது குறித்து பேசிய ஆனந்த் ராஜ் இந்த பணம் எல்லாம் எங்கே இருக்கிறது என கேள்வி எழுப்பினார். அதிமுகவை காப்பாற்றும் பொறுப்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் உள்ளது என்றும் ஆனந்த்ராஜ் தெரிவித்தார்.
விழிப்புணர்வோடுதான் உள்ளனர்
இனியும் மக்களை ஏமாற்றி சசிகலா குடும்பத்தினர் அதிகாரத்திற்கு வர முடியாது என்றும் ஆனந்த்ராஜ் கூறினார். மேலும் நீதிபதிகளும், தேர்தல் ஆணையமும் விழிப்புணர்வோடுதான் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒரு குடும்பத்தின் கைகளுக்குள்..
ஒரு குடும்பத்தின் கரங்களுக்குள் அதிமுக போய்விடக் கூடாது என்றும் நடிகர் ஆனந்த்ராஜ் வலியுறுத்தினார். பொள்ளாச்சியில் ஷுட்டிங் முடித்துவிட்டு சென்னை திரும்புவதற்காக கோவை விமான நிலையம் வந்த நடிகர் ஆனந்த் ராஜ் இவ்வாறு பேசினார்.