கருணாநிதிக்கு முதல் தலைவராக தினகரன் மலரஞ்சலி!
கருணாநிதி உடலுக்கு டிடிவி தினகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: மரணம் - இயற்கைக்கு அப்பாற்பட்டது என்பதை காலம் தெளிவுபடுத்தி கொண்டே இருக்கிறது. அது கருணாநிதியின் மரணத்திலும் வெளிப்பட்டு போகிறது.
பொதுமக்கள் பார்வைக்காக ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் சரியாக 5.30 மணிக்கு உடல் வைக்கப்பட்டது. ஏற்கனவே ஏராளமானோர் ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடலை பார்க்க துடித்து காத்திருந்தனர்.
தினகரன் அஞ்சலி
உடல் வைக்கப்பட்டதுமே முதல் ஆளாக அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் வந்து கருணாநிதி உடலுக்கு மரியாதை செலுத்தினார். கருணாநிதி கிட்டத்தட்ட அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெற்ற நேரத்தில் தான் டிடிவியின் அரசியல் பயணமே விஸ்வரூபமெடுத்தது.
மருத்துவமனை வந்தார்
அதனால் நேரடி மோதலோ, இணக்கமோ, சுணக்கமோ இருவருக்கும் ஏற்பட வாய்ப்பில்லாமல் போய்விட்டது. சசிகலாவின் திருமணத்தை கருணாநிதி நடத்தி வைத்தார் என்பதை வேண்டுமானால் நெருக்கத்தின் அறிகுறி என எடுத்துக் கொள்ளலாம். நேற்று முன்தினமும் மருத்துவமனைக்கு வந்த தினகரன் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்துவிட்டு சென்றார்.
ஸ்டாலினுக்கு வணக்கம்
தற்போது முதல் ஆளாக அஞ்சலி செலுத்தியுள்ளார். சிறிது நேரம் கருணாநிதி உடல் அருகே இருந்தார். ராணுவ மரியாதை நடைபெறும்வரை அமைதியாக நின்றிருந்த டிடிவி தினகரன், பின்னர் அங்கிருந்த ஸ்டாலினுக்கு வணக்கம் செலுத்தி விட்டு சென்றார். டிடிவி தினகரனுடன் வெற்றிவேல் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
முதல் ஆளாக அஞ்சலி
எப்படி பார்த்தாலும் தினகரன் முதல் ஆளாக வந்து கருணாநிதிக்கு மரியாதை செலுத்தியது மற்ற அரசியல்வாதிகளிடமிருந்து பிரித்து தனியே காட்டியுள்ளது. மாறுபட்ட அரசியல் தலைவர்களும் தன்னை நாடி வரும் அளவுக்கு 95 வருட கால வாழ்வை கருணாநிதி விட்டு சென்றிருக்கிறார் என்பது தினகரனின் அஞ்சலி மூலமும் தெரிய வந்துள்ளது.