தினகரன் கையில்தான் இன்னமும் ஆட்சி அதிகாரம் உள்ளது - மதுசூதனன் பகீர்
தினகரனுக்கு உளவுத்துறை தகவல்கள் செல்கின்றன. ஆட்சி அதிகாரம் இன்னமும் அவர் கையில்தான் இருக்கிறது என்று அவைத்தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார்.
கடலூர்: தினகரனிடம் தான் இப்போது ஆட்சி இருக்கிறது. அதிகாரம் அவரது கைகளில்தான் இருக்கிறது. அதனால் உளவுத்துறையின் நோக்கம் அவருக்குத் தெரியும் என்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார்.
கடலூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றார்.
நான்தான் அ.தி.மு.க. என்று கூறிவரும் தினகரனிடம் அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை உள்ளதா? அவர் கட்சிக்கு துரோகம் செய்கிறார் என்பதை ஜெயலலிதா உணர்ந்து கொண்டதால் அவரை கட்சியில் இருந்து நீக்கியதோடு, நாடாளுமன்றத்துக்கும் செல்ல வேண்டாம் என்று உத்தரவிட்டார்.

சொத்து பற்றி விசாரணை
1983-ம் ஆண்டு வரை வாடகை வீட்டில் இருந்தவர்தான் சசிகலா. தற்போது சசிகலாவுக்கும் நடராஜனுக்கு எப்படி இவ்வளவு சொத்துக்கள் வந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தினால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என்று கூறினார்.

எடப்பாடி ஆட்சி வீட்டுக்கு போகும்
களக்காட்டில் பேசிய டிடிவி தினகரன், வரும் தை மாதத்திற்குள் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அகற்றப்பட்டு ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சி ஏற்படும். தை மாதத்தில் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்று கூறினார். இதற்கு பதிலளித்த மதுசூதனன் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்தார்.

உளவுத்துர தகவல்கள்
தினகரனிடம் தான் இப்போது ஆட்சி இருக்கிறது. அதிகாரம் அவரது கைகளில்தான் இருக்கிறது. அதனால் உளவுத்துறையின் நோக்கம் அவருக்குத் தெரியும். அதனால் அவர் என்ன சொன்னாரோ அது உண்மையாகத்தான் இருக்கும். அவருக்கு உளவுத்துறை தகவல்கள் சென்றுகொண்டிருக்கின்றன. எனவே அவர் ஏதோ ஒரு திட்டத்தோடுதான் இதைச் சொல்லுகிறார் என்றார் மதுசூதனன்.

சளி பிடிப்பது சகஜம்தானே
அணிகள் இணைந்தாலும் ஓ.பன்னீருக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே இன்னும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகச் சொல்கிறார்களே? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மனுஷனுக்கு மண்டைனு இருந்தா சளி இல்லாத இருக்குமா? இருக்கத்தான் செய்யும். அதெல்லாம் போகப் போக சரியாயிடும். இரட்டை இலை கிடைச்ச உடனே எல்லாம் சரியாகிடும் என்று கூறினார்.

அதிமுக அவைத்தலைவர்
சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியே வந்தபோது அவருடன் வெளியே சென்றார் மதுசூதனன். அப்போது சசிகலா அணி சார்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டபோது, ஓ.பி.எஸ். அணியின் சார்பில் வேட்பாளராக நின்றவர் மதுசூதனன். ஆகஸ்ட் மாதம் இரு அணிகளும் இணைந்த நிலையில் மீண்டும் மதுசூதனனே அவைத் தலைவராக இருக்கிறார். இவர் தினகரன் பற்றி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலில் நடிகர்கள்
நடிகர்கள் அரசியலுக்கு வர விரும்புகிறார்கள். அவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்காக போராடி இருக்கிறார்களா? அல்லது அவர்கள் அடிமட்ட தொண்டர்களின் பிரச்சினைகளுக்காக போராடி சிறை சென்றுள்ளனரா?
சிறை செல்வது மட்டுமே அரசியலுக்கான அடிப்படை தகுதி இல்லை. எந்த விதமான போராட்டமும் செய்யாமல் அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்றார்.

உண்மையான அதிமுக
உண்மையான அ.தி.மு.க. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது ஒருங்கிணைப்பில் செயல்படுகிறது. இதனால் எங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும். அதன் பின்னர் தற்போது இருக்கும் மனக்கசப்புகள் அனைத்தும் நீங்கி அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள். மதுசூதனன் பேட்டியின் மூலம் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளிடையே மனக்கசப்புகள் இருப்பது அம்பலமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications