தினகரன் 'மாமியார்' வீட்டுக்கு போகப்போகிறார்.. எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேச்சு
சென்னை: தினகரன் 'மாமியார்' வீட்டுக்கு செல்லப்போகிறார் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக தெரிவித்தார்.
சென்னை தங்கசாலையில் அண்ணாவின் 109வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை கொண்டாட தகுதியுள்ள ஒரே கட்சி அதிமுக தான். நமது மாநிலம், நமது மொழியின் பெயரோடு இணைந்து, தமிழ்நாடு என அழைக்கப்படுவதற்கு காரணமானவர் பேறிஞர் அண்ணா.
திமுக ஆட்சியில் இருந்த போது மக்களுக்கு என்ன செய்தது? உழைப்பாளர்களை தொண்டர்களாக கொண்ட அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. கடும் வறட்சியிலும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறோம்.
திமுகவுடன் தினகரன் கூட்டு
எடப்பாடி தொகுதியில் 9 முறை போட்டியிட்ட எனக்கு எந்த பிரசாரமும் செய்யாத தினகரன் எனது வெற்றியில் உரிமை கொண்டாடுவதா? தமிழக அரசை கவிழ்ப்பதற்காக திமுகவுடன் சேர்ந்து தினகரன் நாடகம் ஆடுகிறார். நாங்கள் பணி முடிந்தால் வீட்டுக்குத்தான் செல்வோம் (பழனிச்சாமி வீட்டுக்கு அனுப்பப்படுவார் என தினகரன் இன்று பேட்டியளித்திருந்தார்), ஆனால் தினகரன் 'மாமியார்' வீட்டுக்கு செல்லப்போகிறார்.
தினகரனுக்கு கதவடைப்பு
தினகரன் பிடித்து வைத்திருக்கும் எம்எல்ஏக்களை வெளியே விட்டால், எங்களிடம் ஓடோடி வந்துவிடுவார்கள். ஜெயலலிதாவால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் தினகரன். அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்ற வேண்டும் என்று முயற்சித்த தினகரன் குடும்பத்தினருக்கு அனைத்து கதவுகளும் மூடப்பட்டுவிட்டன.
ஜெயலலிதா ஆன்மா
அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது; தினகரனின் கனவு பலிக்காது. துரோகம் செய்தவர்களை எல்லாம் ஜெயலலிதாவின் ஆன்மா தண்டித்துக் கொண்டிருக்கிறது, அந்த வரிசையில் தினகரன் தப்ப முடியாது. ஸ்டாலினை நம்பி தலைவர் பதவியை கொடுக்க கருணாநிதியே தயங்கும்போது, மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?
பாஜக கூட்டணியில் திமுக
மத்திய பாஜக அமைச்சரவையில் 5 ஆண்டு காலம் இடம்பிடித்திருந்த திமுக, இப்போது பாஜகவை தீண்டத்தகாத கட்சி என கூறுவதா? ஜப்பான் உதவியுடன் தமிழகத்தில் தொழில்நகரம் அமைக்கப்படும் என்று அறிவித்த பிரதமருக்கு, நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடும் வறட்சியிலும் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். இதனிடையே, ஒரு வாரத்திற்குள் இரட்டை இலை சின்னத்தை மீட்போம் என்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.