மாண்புமிகு "சுயேச்சை" வேட்பாளர் டிடிவி தினகரன்.. "குண்டு பல்பு" கிடைக்குமா??
சென்னை: அதிமுக வேட்பாளராக எங்கே டிடிவி தினகரன் வென்று விடுவாரோ என்ற அச்சத்தில் இருந்து வந்த மக்களுக்கு அந்த அபாயம் இன்று இரவு நீங்கி நிம்மதிப் பெருமூச்சு ஏற்பட்டிருக்கும். இப்போது தினகரன் வெறும் சுயேச்சை வேட்பாளர் மட்டுமே (ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அவர் கூறி விட்டார்).
அதிமுக வரலாற்றில் 2வது முறையாக இரட்டை இலை சின்னம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக என்றாலே இரட்டை இலைதான். அந்த சின்னத்துக்குத்தான் ஓட்டு விழுந்து வந்தது. ஆனால் அது ஜெயலலிதாவுக்கே தோல்வியைக் கொடுக்கவும் தவறியதில்லை.

தமிழக அரசியல் களத்தில் மறக்க முடியாத, ஒரு முக்கியமான சின்னமாக வலம் வந்தது இரட்டை இலை. அதை தற்போது தேர்தல் ஆணையம் தூக்கி தூரப் போட்டு விட்டது. இருவருக்கும் கிடையாது என்று கூறி விட்டனர்.
இதனால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் யாருக்கும் இரட்டை இலை கிடையாது. எந்த வேட்பாளரும் இந்த சின்னத்தில் போட்டியிட முடியாது. டிடிவி தினகரன் அதிமுக சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனன் நிறுத்தப்பட்டுள்ளார்.
தற்போது இருவருக்கும் இரட்டை இலை கிடையாது. இருவருமே சுயேச்சை வேட்பாளர்களாகவே கருதப்படுவார்கள். அவர்களுக்கு குண்டு பல்பு, துடைப்பம், தென்னை மரம் போன்ற ஏதாவது ஒரு சுயேச்சை சின்னம் மட்டுமே ஒதுக்கப்படும். துடைப்பம் கூட கிடைக்க வாய்ப்பில்லை. அதை ஆம் ஆத்மி வைத்துள்ளது.
கடந்த காலத்தில் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக உடைந்தபோது ஜெ. அணிக்கு இரட்டைப் புறாவும், ஜெயலலிதா அணிக்கு சேவலும் கிடைத்தன. ஆனால் தற்போது இவை தடை செய்யப்பட்டுள்ளதால் அதெல்லாம் கிடைக்க வாய்ப்பே இல்லை.
மொத்தத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் என்பது மாறி சுயேச்சை வேட்பாளராக சுருங்கிப் போய் விட்டார் தினகரன்.. மதுவும்தான்!












Click it and Unblock the Notifications