நாளைக்கு 12 மணிக்கு வர்றீங்க, 10 பேர் மட்டும்தான் கூட வரணும்.. தினகரனுக்கு ஆளுநர் அனுமதி!
டிடிவி தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள், எம்பிக்களுடன் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை நாளை நண்பகல் 12 மணிக்கு சந்திக்கிறார்.
சென்னை: ஆளுநர் வித்யாசாகர் ராவை நாளை பகல் 12 மணிக்கு சந்திக்கிறார் டிடிவி தினகரன். டிடிவி தினகரனுடன் 10 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக இரு அணிகள் இணைந்த பிறகு அதிமுக அம்மா கட்சி பொதுச் செயலாளர் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு 19 எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முதல்வர் கே.பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும் அதனால் அவருக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் கூறி, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தனித்தனியாக மனு கொடுத்தனர்.
இதையடுத்து, அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் மனு கொடுத்தன. இப்போது தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகியோர், இரண்டு நாட்களில் ஆளுநர் முடிவு எடுக்காவிட்டால் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்போம் என்று தெரிவித்தனர்.
சென்னையில் நேற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 111 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டதாகவும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 9 பேர், கூட்டணி எம்எல்ஏக்கள் மூவர் உட்பட 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
ஆனால் இதை தினகரன் அணி திட்டவட்டமாக மறுத்திருந்தது. ஆதரவு கொடுத்தவர்களின் பெயர்களை வெளியிட தயாரா என்றும் தங்க தமிழ் செல்வன் சவால் விட்டார். இந்த நிலையில் நாளை ஆளுநர் வித்யாசாகர் ராவை தினகரன் தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சந்திக்க உள்ளார்.
செப்டம்பர் 7ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு 10 பேருடன் ஆளுரை சந்திக்கப் போகிறார் தினகரன். ஆளுநரை சந்தித்து தினகரன், சட்டசபையை கூட்டவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் வலியுறுத்துவார் என்று தெரிகிறது. இது எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.