ஆட்சி கவிழ்ப்பை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் விரும்பவில்லை.. அம்பலப்படுத்தும் கடிதம்
சென்னை: ஆட்சி மீதான நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறி கலைக்க வலியுறுத்தாத டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும், வெறுமனே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதுதான் தங்களுக்கு நம்பிக்கையில்லை என கூறியிருப்பதில் உள்ளது சூட்சுமம்.
ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று சந்தித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதல்வர் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்றும், அவர் ஜெயலலிதா விரும்பியபடி நடக்கவில்லை என்பதால் தாங்கள் அவர் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் தெரிவித்தார்கள்.
இந்த கடிதத்தை தனித்தனியாக 19 எம்எல்ஏக்களும் வழங்கியுள்ளனர்.

கலைக்க கூறவில்லை
இந்த கடிதத்தின் மூலம் அவர்கள் ஆளுநரிடம் என்னதான் கேட்க வருகிறார்கள் என்பது யாருக்குமே புரியாத புதிராகும். ஏனெனில் ஆட்சியை கலைக்க வேண்டும், அல்லது குறைந்தபட்சம் நம்பிக்கை வாக்கெடுப்பாவது நடத்த வேண்டும் என்பதெல்லாம் அந்த கடிதத்தில் இல்லை.

எடப்பாடி மட்டுமே குறி
அரசு மீது நம்பிக்கையில்லை என்று குறிப்பிட்டால் அப்போது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட முடியும். ஆனால், எம்எல்ஏக்கள் தங்கள் கடிதத்தில் தனிப்பட்ட ஒருவரை குறிப்பிட்டு, அதாவது முதல்வர் பதவியில் உள்ளவரை மட்டுமே குறிப்பிட்டுள்ளனர். முதல்வரை குறிப்பிட்டால் அது மொத்த அமைச்சரவையை குறிப்பிடுவதை போன்றதாகும் என்று எம்எல்ஏக்கள் தரப்பு விளக்கம் அளிக்க கூடும். அப்படிப்பார்த்தால், மொத்தமாக அரசை கலைத்துவிடுங்கள் என்று ஈஸியாக அவர்கள் ஏன் கோரிக்கைவிடுக்கவில்லை என்பதில்தான் உள்ளது சூட்சுமம்.

மறு தேர்தல் தேவையில்லை
டிடிவி தினகரன் தரப்பு எம்எல்ஏக்களுக்கும் ஆட்சி கலைவதில் விருப்பம் இல்லை என்பதையே இந்த கடிதம் சுட்டுகிறது. தேர்தலுக்கு தண்ணியாக பணத்தை செலவிட்டு வெற்றி பெற்ற எந்த ஒரு உறுப்பினருமே மீண்டும் முன்கூட்டியே தேர்தலை சந்திக்கவிரும்புவதில்லை. அதிலும் ஆளும் கட்சியினர் என்றால் சொல்லி தெரியவேண்டியதில்லை. எனவேதான் கூழுக்கும் ஆசை, மீசையிலும் ஒட்டக்கூடாது என்பது போன்ற சங்கடத்தில் சிக்கியுள்ளனர் தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள்.

மிரட்டலுக்கே பயன்படும்
ஆளுநரிடம் அவர்கள் வழங்கிய கடிதம் தங்கள் ஒற்றுமையை காட்டிக்கொள்ளத்தான் பயன்படுமே தவிர அதற்கு பெரிய அளவில் வலு இல்லை. எடப்பாடி குழுவை தங்கள் சொற்படி ஆட வைக்க வேண்டும் என்பது மட்டுமே தினகரன் குழுவின் தற்போதைய எண்ணம். அதைவிடுத்து ஆட்சியை கலைப்பதால் எந்த பலனும் கிடைக்காது. நஷ்டமே ஏற்படும் என்று தினகரன் தரப்பு நினைப்பதன் வெளிப்பாடே இந்த கடிதம்.












Click it and Unblock the Notifications