அரசியலுக்கு குட்பை சொல்லவும் தயார்.. டிடிவி தினகரன் திடீர் பேச்சால் பரபரப்பு
ஆர்கே நகர் தேர்தலுக்குப் பின் அதிமுக அணிகள் இணைந்தால் அதனை வரவேற்பேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்கே நகர் இடைத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுக அணிகள் இணைந்தால் அதனை வரவேற்பதாகவும் என்னை கிளம்பி போகச் சொன்னால் அரசியலைவிட்டு ஒதுங்கும் பற்றற்ற நிலையில்தான் தாம் இருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
முதல்வர் நாற்காலியை குறித்து சசிகலாவும் அவரது உறவினர்களும் நீண்டகாலமாக காத்திருக்கின்றனர். 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, சசிகலா குடும்பத்தினரின் சதி செயல்களை பகிரங்கப்படுத்தினார்.
ஆட்சியை கைப்பற்ற சசிகலா குடும்பத்தினர் சதித் திட்டம் தீட்டியதால் கூண்டோடு அவர்களை கட்சியை விட்டு நீக்கியதுடன் பல வழக்குகளில் சிறையிலடைத்தார். ஜெயலலிதா மறைந்த உடனேயே அதிமுகவை சசிகலா கைப்பற்றினார். ஆட்சியையும் அவர் கைப்பற்ற நினைத்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
துணைப் பொதுச்செயலராக....
இதனால் சசிகலாவின் முதல்வர் கனவு தவிடுபொடியானது. சிறைக்குப் போகும் முன்னர் டிடிவி தினகரனை அதிமுகவின் துணை பொதுச்செயலராக நியமித்தார் சசிகலா. இதையடுத்து தினகரனும் கட்சி, ஆட்சி இரண்டையும் கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
முதல்வர் நாற்காலி ஆசை
இதன் ஒருபகுதியாகவே ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் தினகரனே போட்டியிடுகிறார். இத்தொகுதியில் தினகரன் வென்றால் நிச்சயம் முதல்வர் நாற்காலியில் அமர முயற்சிப்பார் என்றே கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவாளர்களும் இதற்கு இடம் அளிப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதிரடி அறிவிப்பு
இதனிடையே புதிய தலைமுறை டிவியில் அக்னி பரீட்சை நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த தினகரன் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தினகரன் கூறியுள்ளதாவது:
இரு அணிகள் இணைந்தால் வரவேற்பு
ஆர்கே நகர் இடைத் தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவின் இரு அணிகளும் கை கோர்த்தால் அதனை வரவேற்க தயாராக இருக்கிறேன். அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நாங்கள் ஆட்சியைப் பார்த்து கொள்கிறோம். நீங்கள் சென்றுவாருங்கள் என கூறிவிட்டால் உடனே பை சொல்லிவிட்டு கிளம்பிவிடுவேன்.
பற்றற்ற நிலையில்....
அப்படியான ஒரு பற்றற்ற நிலையில்தான் நான் இருக்கிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார். முதல்வர் நாற்காலி கனவில் இருக்கும் தினகரன் தாம் பற்றற்ற நிலையில்தான் இருக்கிறேன் என கூறியிருப்பதை அதிமுகவினரே நமுட்டு சிரிப்புடன்தான் பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.