ஆர்கே நகரில் தேர்தல் பணிமனையை உற்சாகமாக திறந்த டிடிவி தினகரன்
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சசி அணியின் வேட்பாளர் டிடிவி தினகரன் இன்று தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.
சென்னை: ஆர். கே. நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன் இன்று 152 பேர் அடங்கிய தேர்தல் பணி பொறுப்புக்குழுவை அறிவித்த கையோடு பணிமனையையும் உற்சாகமாக திறந் வைத்து உள்ளார்.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டு அணிகளாக பிரிந்து உள்ளன. ஜெயலலிதா மறைவினால் காலியாக உள்ள ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் அணியின் சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். இரு அணிகளுமே தாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் தங்களுக்கு மட்டுமே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளன.
இடைத்தேர்தலில் போட்டியிடும் எதிர்கட்சியினர் அனைவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து விட்டனர். அதிமுகவின் இரு அணிகளும் இன்னமும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை.
இதனிடையே அதிமுகவின் வெற்றிச்சின்னமான இரட்டை இலை யாருக்கு என்பதே இன்னும் முடிவாகவில்லை. ஆனால் சசிகலா அணியினர் படு உற்சாகமாக உள்ளனர். 152 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை அறிவித்த டிடிவி தினகரன், இன்று தேர்தல் பணிமனையை திறந்து வைத்துள்ளார்.
தேர்தல் பணிமனையை திறக்கும் முன்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் டிடிவி தினகரன் மரியாதையை செலுத்தினார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன்,தங்கமணி ஆகியோரும் மரியாதையை செலுத்தினர். மேலும் அமைச்சர்கள் பெஞ்சமின், சரோஜா, நிலோபர் கபில் ஆகியோரும் மரியாதை செலுத்தினர். இதனையடுத்து தேர்தல் பணிமனையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் புடைசூழ தேர்தல் பணிமனையை உற்சாகமாக திறந்து வைத்துள்ளார் டிடிவி தினகரன்.
இரட்டை இலை சின்னத்துடன் நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக கூறியுள்ள டிடிவி தினகரன், வேட்புமனு தாக்கல் முடிந்த உடன் பிரச்சாரத்தை தொடங்கப் போவதாக கூறியுள்ளார்.