இன்று சென்னை வருகிறார் டிடிவி தினகரன்.. தடபுடல் வரவேற்புக்கு தயாராகும் எம்எல்ஏக்கள் !
சென்னை: திகார் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்ட டிடிவி தினகரன் இன்று டெல்லியில் இருந்து சென்னை வருகிறார். அவரை வரவேற்க தங்கதமிழ்ச்செல்வன் உள்பட 10 எம்எல்ஏக்கள் டெல்லி சென்றுள்ளனர்.
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க பேரம் பேசப்பட்டதாக தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்திருந்தது. அதில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார் தினகரன்.

கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரன் 35 நாட்களாக சிறை வாஸத்துக்கு பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய டெல்லி திஸ் ஹசாரே நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து பிணைத்தொகை செலுத்துவது உள்ளிட்ட மற்ற சட்ட ரீதியான நடைமுறைகள் நிறைவு பெற்ற பின்னர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த டிடிவி தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர். திகார் சிறைத்துறை நிர்வாகம் இருவரையும் ஜாமீனில் விடுவித்தது.
இதனைத்தொடர்ந்து தினகரன் டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். அவரை செந்தில் பாலாஜி, வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் உள்பட 10 எம்எல்ஏக்கள், 5 எம்.பிக்கள், கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
இந்நிலையில் டெல்லியில் இருந்து நாளை காலை சென்னை வரும் தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தினகரன் விடுவிக்கப்பட்டதை அடுத்து அதிமுகவின் சில அமைச்சர்கள் கலக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications