டிடிவி தினகரன் வீடு அருகே இருந்த பேனர் கிழிப்பு.... அடையாறில் பரபரப்பு
டிடிவி தினகரன் வீட்டருகே வைக்கப்பட்டிருந்த அவரது பேனரை யாரோ சிலர் கிழித்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: அதிமுக அம்மா அணியின் பொது செயலாளர் டிடிவி தினகரனின் அடையாறு வீட்டருகே வைக்கப்பட்டிருந்த பேனரில் அவரது புகைப்படத்தை மட்டும் யாரோ சில மர்ம நபர்கள் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரட்டை இலையை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் இருந்து டிடிவி தினகரன் ஜாமீனில் வெளியே வந்த நாள் முதல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துவிட்டதால் சசிகலா, தினகரனை ஒதுக்கி வைப்பது என்ற நிபந்தனை நிறைவேற்றப்பட்டுவிட்டது.
இதனால் கடும் எதிர்ப்பு தெரிவித்த தினகரன் ஆதரவாளர்களும், ஆதரவு எம்எல்ஏ-க்களும் எடப்பாடிக்கு எதிராக திரும்பியுள்ளனர். இந்நிலையில் எடப்பாடியின் ஆட்சி கவிழுமா அல்லது தப்புமா என்ற நிலை நீடித்து வருகிறது.
இந்த சூழலில், ஜெயலலிதா, சசிகலா, தினகரன் ஆகியோர் புகைப்படங்கள் அடங்கிய பேனர் அடையாறில் உள்ள தினகரன் வீட்டருகே வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனரில் இருந்த தினகரனின் புகைப்படத்தை மட்டும் யாரோ மர்மநபர்கள் கிழித்து விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.