3,000 பேர் வருவாங்கன்னு சொன்னாங்க.. 300 பேர் கூட வரலையே.. ஈரோட்டில் தினகரன் செம 'ஷாக்'
பழனிசாமியை முதல்வர் ஆக்கியது என்று சிறு குழந்தைக்கும் தெரியும் என்றார் டிடிவி.
Recommended Video
ஈரோடு: டிடிவி தினகரன் ஈரோட்டில் பங்கேற்ற விழாவில் மூவாயிரம் பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அமமுகவில் இணைவதாக கூறப்பட்ட நிலையில் 300 பேர்கூட இல்லாததால் அதிருப்தியடைந்தார்.
பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணையும் விழா ஈரோடு அக்ரகாரத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் துணை பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர். தாம் வரும் வழியில் காவல்துறையினர் வாகனங்களை வைத்து தடை ஏற்படுத்தியதாகவும் ரவுடிகள் செய்யும் வேலையை காவல்துறை செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட காவல்துறைக்கு வெட்கக்கேடாக இல்லையா என்று கேள்வி எழுப்பிய அவர், நீதிமன்ற அனுமதியுடன் நடத்தப்படும் கூட்டத்திற்கு தடை ஏற்படுத்தினால் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியது வரும் என்றார்.
யார் இந்த தினகரன் என்று கேட்கும் முதல்வர் பழனிச்சாமியை முதல்வர் ஆக்கியது யார் என்று சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும் எனவும் 17 சட்டமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும் நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளதால் நல்ல தீர்ப்பும் வரும், இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கும் வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, கூட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து மூவாயிரம் பேர் அமமுகவில் இணைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் 300 பேர்கூட இல்லாமல் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்ததாகவும், அதனால் டிடிவி.தினகரன் அதிருப்தியடைந்ததாகவும் கூறப்படுகிறது.