தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம்.. தினகரன் மனைவி அனுராதாவிடம் டெல்லி போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை
இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனின் மனைவி அனுராதாவிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னை: இரட்டை இலை சின்னத்துக்காக தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரனின் மனைவி அனுராதாவிடமும் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்தார் என்பது வழக்கு. இவ்வழக்கில் புரோக்கர் சுகேஷ் சந்திரா, தினகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது டிடிவி தினகரனை 5 நாள் கஸ்டடியில் எடுத்துள்ளது டெல்லி போலீஸ். இதையடுத்து தினகரனை இன்று சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தினகரன் மனைவி அனுராதாவிடமும் டெல்லி போலீஸ் விசாரணை நடத்தியுள்ளனர். தினகரனின் அடையாறு இல்லத்தில் வைத்து இந்த விசாரணை நடைபெற்றது. விசராணையின் போது பல்வேறு கேள்விகளை டெல்லி போலீசார் முன்வைத்தாக கூறப்படுகிறது.
ஜெயா டிவியை நிர்வகித்து வந்த அனுராதாவை கடந்த 2012-ஆம் ஆண்டு ஜெயலலிதா நீக்கினார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து மீண்டும் ஜெயா டிவியில் மறைமுகமாக அனுராதா கை ஓங்கியது குறிப்பிடத்தக்கது.