ஓட்டுக்கு ரூ.5000 தரும் டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய ஜி. ராமகிருஷ்ணன் கோரிக்கை
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சிபிம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளார்.
சென்னை: ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் தரும் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சிபிஎம் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கோரியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜி. ராமகிருஷ்ணன் கூறியதாவது: அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் கொடுக்கின்றார். இதற்காக 50 பேருக்கு ஒரு நபர் என்ற அளவில் ஆட்கள் நியமிக்கப்பட்டு வேலை ஜோராக நடைபெற்று வருகிறது.
பணப்பட்டுவாடாவில் ஈடுபடுபவர்களை கையும் களவுமாக பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் அலுவலர்களிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அமைச்சர் டோக்கன்
இன்று காலை 10 மணியில் இருந்து 11 மணிக்குள் வாக்காளர்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சரும் டோக்கன் கொடுத்து வருவதாக தகவல் கிடைத்து எங்கள் கட்சியினர் காவல் துறைக்கு புகார் கொடுத்தனர்.
எஸ்கேப்
சம்பவ இடத்திற்கு போலீசாரும் சென்றுள்ளனர். அப்போது அமைச்சரும் முன்னாள் எம்எல்ஏவும் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டனர். மற்றவர்களை போலீசார் கைது செய்யவில்லை. அப்படியே அவர்களை போலீசார் போக விட்டுவிட்டனர். ஏன் என்று போலீசாரிடம் கேட்டால் பதில் ஒன்றும் இல்லை.
அரசின் ஒத்துழைப்பு
இங்க நடப்பதை எல்லாம் பார்த்தால் அரசு நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன்தான் டிடிவி தினகரன் ஆட்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிகிறது. இதனை பார்வையாளர்கள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
ரத்து கூடாது
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த போது தேர்தலை ஒத்தி வைத்தார்கள். அதன் பிறகும் பணப்பட்டுவாடா நடைபெற்றது. அதன் பிறகு தேர்தலை ரத்து செய்தார்கள். இன்றைய சூழலில் ஆர்.கே. நகரில் தேர்தலை ஒத்தி வைப்பதோ, ரத்து செய்வதோ சரியான நடவடிக்கையாக இருக்காது.
தகுதி நீக்கம்
இதற்கு மாறாக, எந்த வேட்பாளருக்காக பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதோ, எந்த வேட்பாளருக்கு ஆரத்தி எடுப்பதற்கு வீட்டுக்கு 100 ரூபாய் பணம் கொடுக்கப்படுகிறதோ அந்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இந்த நடவடிக்கையை உடனடியாக தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்.
ஜனநாயகம் இல்லை
எவ்வளவு சிஆர்பி வந்தாலும் காவல்துறை இருந்தாலும் பார்வையாளர்களோ தேர்தல் ஆணையமோ அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்தத் தேர்தல் ஜனநாயகமாக நடக்காது. ஆகவே, இதுகுறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ எடுத்து காண்பித்தால் கூட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள் என்று ஜி. ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.