தி.மு.க தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறது : ஆர்.கே நகரில் டி.டி.வி தினகரன்
தி.மு.க தரம் தாழ்ந்த அரசியல் செய்வதாக ஆர்.கே நகர் பிரச்சாரத்தில் டி.டி.வி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை : ஜெயலலிதா மரணத்தை வைத்து தி.மு.க தரம் தாழ்ந்த அரசியல் செய்வதாக டி.டி.வி தினகரன் ஆர்.கே நகர் பிரச்சாரத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆர்.கே நகரில் வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஒருபக்கம் தேர்தல் ஆணையம் தீவிரமான கட்டுப்பாடுகள் விதித்து இருந்தாலும், தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்று வருவதாக தி.மு.க., பா.ஜ.க ஆகிய கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், ஆர்.கே நகர் தொகுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் டி.டி.வி தினகரன் கூறியதாவது:
ஜெயலலிதா மரணம் குறித்து தி.மு.க., வேண்டுமென்றே பொய்யான தகவல்களையும், சந்தேகங்களையும் அரசியல் பரபரப்புக்காக கிளப்பி வருகிறது. இந்த விஷயத்தில் தி.மு.க தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறது. 70 ஆண்டுக்கும் மேலான ஓர் அரசியல் இயக்கம் இவ்வாறான அரசியலில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது.
எடப்பாடி, ஓ.பி.எஸ் என யார் பிரச்சாரம் செய்தாலும், அவர்கள் தோற்கப்போவது உறுதி. கட்சியும், ஆட்சியும் தான் எங்களிடம் இல்லை; உண்மையான தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள். அதற்கு எனக்கு தொகுதியில் மக்களிடையே கிடைக்கும் வரவேற்பே சாட்சி.
இரட்டை இலையை பெற மக்கள் குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்க தயாராகி வருகிறார்கள். விரைவில் அதுவும் நடக்கும். தேர்தல் சிறப்பாக நடக்க எங்கள் பக்கத்தில் இருந்து ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம். ஆனால், எங்கள் அணித் தொண்டர்களை மிரட்டி , பொய் வழக்குப் பதிந்து, கைது செய்கிறது காவல்துறை. இந்த அடக்குமுறைகளை எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
நான் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதால் தான் ஆர்.கே நகரில் பிரச்சாரத்திற்கு செல்லும் போது பெண்கள் குக்கரை காட்டி ஆதரவு வழங்குகிறார்கள் என்று ஆர்.கே நகர் மக்களை கொச்சைப்படுத்துவது போல, பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பேசி வருவது கண்டனத்திற்குரியது.












Click it and Unblock the Notifications