புகழேந்தி இப்படி வாய்க்கு வந்தபடி பேசுகிறாரே.. தட்டி வைக்கக் கூடாதா தினகரன்?
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார்.
தினகரனின் ஆதரவாளர்களான அதிமுகவில் இருந்து நாஞ்சில் சம்பத், புகழேந்தி உள்பட 5 பேர் நீக்கப்பட்டுள்ளனர். வி.பி.கலையராஜன், பாப்புலர் முத்தையா, சி.ஆர்.சரஸ்வதி ஆகியோரை நீக்கியுள்ளனர்.
5 பேரையும் நீக்கி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதற்கு நீக்கப்பட்ட தங்கதமிழ் செல்வன் மற்றும் புகழேந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தரக்குறைவாக விமர்சனம்
இந்நிலையில் சன்நியூஸ் தொலைக்காட்சிக்கு தினகரனின் ஆதரவாளரான புகழேந்தி தொலைபேசி வாயிலாக பேட்டியளித்தார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை தகாத வார்த்தைகளாலும், அவன் இவன் என்றும் மிக தரக்குறைவாக விமர்சனம் செய்தார்.
எட்டப்பாடி, ஜீரோ
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எட்டப்பாடி பழனிச்சாமி என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜீரோ பன்னீர்செல்வம் என்றும் அவர் விமர்சனம் செய்தார். எடப்பாடி பழனிச்சாமியும் ஓபிஎஸும் அரசியல் அநாதைகள் என்றும் புகழேந்தி கடுமையாக விமர்சித்தார்.
மக்கள் காரி உமிழ்வார்கள்
அவர்களுக்கு தன்னை நீக்க அருகதையில்லை என்றும் அவர் சாடினார். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கொடுத்த தன்னை நீக்கியுள்ளவர்களை மக்கள் காரி உமிழ்வார்கள் என்றும் புகழேந்தி விளாசினார்.
நடமாடும் பிணங்கள்
தங்களை நீக்கி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற அவர், நேற்றே ஆர்கே நகரில் அவர்களின் மானம் மரியாதை போயிவிட்டது என்றும் கூறினார். எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் நடமாடும் பிணங்கள் என்றும் புகழேந்தி சாடினார்.
ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாட்டேன்
எடப்பாடி பழனிச்சாமியையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் அநாதைகளாக அலையவிடும் வரை ஓயமாட்டோம் என்றும் அவர் சூளுரைத்தார். ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி ஜெயிலுக்கு போவது உறுதி என்ற புகழேந்தி அவர்களை ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என சவால்விட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் ஒரு பச்சோந்தி
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு பச்சோந்தி என்றும் நேரத்திற்கு ஏற்றார் போல் மாறுவார் என்றும் அவர் விமர்சித்தார். ஓபிஎஸ் ஈபிஎஸ்க்கு எதிராக இன்று முதல் சுறுசுறுப்பாக அரசியலில் ஈடுபடபோகிறேன், இது சவால் என்றும் புகழேந்தி தெரிவித்தார்.