ஸ்ரீரங்கம் கோவிலில் வெடித்தது தென்கலை- வடகலை அர்ச்சர்கள் மோதல்... கோர்ட்டுக்குப் போக முடிவு!!
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்ற போதும் வழக்கம் போல தென்கலை, வடகலை அர்ச்சகர்களிடையேயான பிரச்சனை மீண்டும் வெடித்துள்ளது.
வைணவ திருத்தலங்களில் வடகலை அல்லது தென்கலை சம்பிரதாயங்களில் எதனை அர்ச்சகர்கள் கடைபிடிப்பது என்பது முடிவுக்கு வராத நீண்டகால பஞ்சாயத்து. யானைக்கும் கூட தென்கலையின் ஒய் வடிவிலான நாமம் போடுவதா? வடகலையின் வி வடிவிலான நாமம் போடுவதா? என்ற பிரச்சனை நீதிமன்றம் வரைக்கும் போன வரலாறும் உண்டு.

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த திங்கள்கிழமையன்று யாகசாலை பூஜை நடைபெற்றது. அப்போது வடகலை அர்ச்சகர்களும் இதில் கலந்து கொள்ள முயற்சித்தனர்.
ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி யாக சாலை பூஜைகளில் வடகலை அர்ச்சர்கள் பங்கேற்கக் கூடாது என்று தென்கலை அர்ச்சகர்கள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து இருதரப்பு அர்ச்சர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை உருவானது.
இது குறித்து தென்கலை அர்ச்சகர் பார்த்தசாரதி கூறுகையில், 1941ஆம் ஆண்டு துறையூர் முனிசீப் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைணவத்தின் தென்கலை பிரிவு சம்பிரதாயங்களே கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளன; தென்கலை அர்ச்சகர்கள்தான் வேத பாரயணங்களை ஓத முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் வடகலை, தென்கலை அர்ச்சகர்களிடையே ஸ்ரீரங்கம் கோவிலில் பிரச்சனை வெடித்து வருகிறது. இதனால் மீண்டும் நீதிமன்றத்துக்கு செல்லலாம் என தீர்மானித்திருக்கிறோம் என்றார்.
இந்த விவகாரம் குறித்து வடகலை பிரிவின் செயலாளர் கண்ணன் கூறுகையில், கோவிலுக்கு வெளியே ஆயிரங்கால் மண்டபத்தில்தான் யாகசாலை பூஜை நடைபெற்றது. ஆகையால் அதில் நாங்கள் எங்களது கடமையை செய்ய முயற்சித்தோம். அதை தென்கலை பிரிவினர் தடுத்தனர் என்றார்.
வடகலை மற்றும் தென்கலை அர்ச்சகர்களிடையேயான இம்மோதலில் தலையிட இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இதனால் வடகலை, தென்கலை அர்ச்சகர்கள் மோதல் விவகாரம் நீதிமன்றத்தின் கதவுகளை தட்ட இருக்கிறது.












Click it and Unblock the Notifications