தூத்துக்குடி அதிமுக வேட்பாளரை பார்த்து கலக்கத்தில் கட்சியினர்
தூத்துக்குடி: தூத்துக்குடியியில் அதிமுக வேட்பாளரின் நடவடிக்கையால் அக்கட்சி நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் நேரத்தில் எப்போதும் பிரமாண்டமாக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கமாம். ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக ஒரு சிறிய மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றுள்ளது.
அப்போது கூட்டத்தில் பேசிய பலரும், தேர்தல் பணிக்கு கட்டாயம் பணம் கொடுக்க வேண்டும் என வெளிப்படையாகவே வலியுறுத்தியுள்ளனர். இதைக் கேட்டுக் கொண்ட வேட்பாளர் தரப்பு அவர்களிடம் உரிய நேரத்தில் உங்களை கவனிப்போம் என உறுதிமொழி கொடுத்து அனுப்பியுள்ளது.
இந்த உற்சாகத்தில் மண்டபத்தை விட்டு வெளியே வந்தவர்களுக்கு கடும் அதிர்ச்சியாம். காரணம், செயல் வீரர்கள் கூட்டத்தின்போது மதிய உணவுக்கு கூட ஏற்பாடு செய்யவில்லையாம். தொண்டர்கள் கொதித்து எழுந்து காரணம் கேட்டபோது, தேர்தல் கமிஷன் பயங்கர ஸ்ட்ரிக்ட் என கூறி அனுப்பி வைத்தார்களாம்.
இந்த பஸ் ஊருக்கு போகாது என்று கமெண்ட் கொடுத்தபடியே நிர்வாகிகள் கலைந்து சென்றார்களாம்.