தூத்துக்குடியில் நஷ்டஈடு வழங்காமல் டிமிக்கி: 2 அரசு பஸ்கள் ஜப்தியால் பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் இரண்டு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிரவேந்திரா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் தூத்துக்குடி பகுதியில் டபிஸ்யூசி ரோட்டில் பேன்சி கடை நடத்தி வந்தார். கடந்த 2010ல் இவர் பாலகிருஷ்ணா என்பவருடன் குரும்பூர் அருகே உள்ள காரவிளை பகுதியில் பைக்கில் சென்றார்.
அப்போது எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் படுகாயம் அடைந்தார். அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து அவரது மனைவி யாசோதா ரூபாய் 40 லட்சம் இழப்பீடு கேட்டு தூத்துக்குடி கோர்ட்டில் வக்கீல் ரவீந்திரன் மூலம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இழப்பீடாக சுரேஷ்குமார் குடும்பத்திற்கு ரூ.20 லட்சத்து 80 ஆயிரத்து 860 வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் இந்த தொகையை போக்குவரத்துக் கழகம் வழங்காததால் இரண்டு பஸ்களை ஜப்தி செய்ய நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
இதையடுத்து கோர்ட் அமீனா தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பஸ்களை ஜப்தி செய்தார். இவை கோர்ட் வாளகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications