தூத்துக்குடியில் மாணவிகள் வைத்த சமத்துவப் பொங்கல்...!
தூத்துக்குடி: தூத்துக்குடி கல்லூரிகளில் மாணவ - மாணவியர்கள் சமத்துவ பொங்கல்விழா கொண்டாடினர்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கேற்ப தை முதல் நாள் தமிழர்கள் திருநாளான பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நகரங்களை காட்டிலும் கிராமங்களில் பொங்கல்விழா பாரம்பரியத்துடன் களை கட்டும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் வகையில் கல்லூரிகளிலும் மாணவ-மாணவியர்கள் பொங்கல் பண்டிகையை சமத்துவ பொங்கல் விழாவாவாக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த வரிசையில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கலை அறிவியல் கல்லூரி மாணவ-மாணவியர்கள் நேற்று கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்கல்விழா வைத்து மகிழ்ந்தனர்.
புதிய மண்பானையில் பொங்கல் இட்டும், குலவையிட்டும், ஆட்டம்-பாட்டத்துடன் பொங்கல் கொண்டாடினர்.
மாணவர்கள் மாட்டு வண்டியில் பயணித்தும் மகிழ்ந்தனர். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் சர்க்கரைபொங்கல் வழங்கி பொங்கல் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இதுபோன்று செயின்ட்மேரீஸ் மகளிர் கல்லூரி மாணவியர்களும் ஆட்டம்-பாட்டத்துடன் சமத்துவபொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.