தூத்துக்குடியில் வடியாத வெள்ளம் - தடுமாறும் மாணவர்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழை விட்டு 2 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் மழை வெள்ள நீர் வடியாமல் இருப்பதால் பொதுமக்கள், மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை கொட்டி தீர்ந்தது. இதனால் குளங்கள் உடைந்து பல கிராமங்களை கடுமையான வெள்ளம் சூழ்ந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் உள்ள 6 வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் அங்குள்ள பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர்.
இந்த நிலையில் மழை ஓய்ந்து 2 மாதங்கள் கடந்த விட்ட நிலையில் வெள்ள நீரை வெளியேற்ற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக முத்தம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளில் இப்போதும் வெள்ள நீர் சூழ்ந்து இருக்கிறது.
இதனால் பல பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து விடாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி சில்வர்புரத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் சுமார் 5 ஆயிரத்திறகும் மேற்பட்ட மாணவர்கள், தொழிலாளர்கள் இந்த வழியாகதான் சென்று வருகின்றனர். குறிப்பாக பாலம் வழியாகத்தான் சென்று வர வேண்டும். தற்போது அந்த பாலத்தில் வெள்ள நீர் ஓடி வருவதால் அவர்கள் பாலத்தை கடக்க சிரமப்பட்டு வருகின்றனர்.
தற்போது பாலத்தின் மேல் பகுதியில் கால் கீழ்பகுதி அளவு தண்ணீர் செல்வதால் மாணவர்களின் பெற்றோர் காலையும், மாலையும் அங்கு காத்திருந்து தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து வருகின்றனர். இதை சுற்றிய நான்கு பகுதிகள் தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அரசு இதை வேடிக்கை பார்ப்பதாக பொதுமக்கள் கொதிப்பில் இருக்கின்றனர்.