”பொங்கலோ பொங்கல்” – தூத்துக்குடியில் வெளிநாட்டவர் வைத்த புதுமைப் பொங்கல்.. ஆட்டோவிலேயே ஊர் வலம்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிநாட்டவர் வேஷ்டி, சேலை அணிந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.
இந்திய கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், மொழிகள் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமானவர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள்.
ஆஸ்திரேலியா, நார்வே, அமெரிக்கா, செக்கோஸ்லோவாக்கியா, அர்ஜென்டினா, ஜெர்மனி, நெதர்லாந்து, உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 48 பேர், கடந்த 28 ஆம் தேதி சென்னைக்கு வந்தனர். அவர்களில் 19 பேர் பெண்கள் ஆவர்.
ஆட்டோவிலேயே புதுச்சேரி:
சென்னையில் இருந்து அவர்கள் ஆட்டோக்கள் மூலம் புதுச்சேரி சென்றனர். பின்னர் தஞ்சை, மதுரை வழியாக நேற்று தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் தங்கள் ஆட்டோக்களை பல வண்ணங்களால் அலங்கரித்து இருந்தனர்.
பிரத்யேக வடிவமைப்பு:
அதை பார்த்தால், வெளிநாட்டினர் பயணத்துக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு இருந்த ஆட்டோக்கள் போன்ற தோற்றத்தை அளித்தது.
வேடிக்கை விநோதம்:
ஆடை விஷயத்திலும் வித்தியாசம் காட்டினர். அவர்கள் அணிந்திருந்த உடைகளும், தொப்பிகளும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையிலும், வேடிக்கையாகவும் இருந்தது. தூத்துக்குடியில் பல்வேறு இடங்களுக்கு 48 பேரும் பல வண்ண ஆட்டோக்களில் சென்று சுற்றி பார்த்தனர்.
23 பானைகளில் பொங்கல்:
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்துக்கு சென்றனர். அங்குள்ள ஒரு தோட்டத்தில், பொங்கலிட்டு பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். 23 பானைகளில் பொங்கலிட்டார்கள்.
பாரம்பரிய உடைகள்:
இதற்காக வெளிநாட்டினர், தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தி பொங்கலிட்டனர். ஆண்கள் வேட்டி, சட்டை, துண்டு அணிந்திருந்தனர்.
பொங்கலுக்கு பரிசு:
பெண்கள் சேலை கட்டி வந்தனர். அந்த பகுதியில் கரும்பு, வாழையால் தோரணங்கள் அமைத்து இருந்தனர். மஞ்சள் குலை, பழம், பனங்கிழங்கு உள்ளிட்டவற்றை படைத்தும் வழிபட்டனர். சிறந்த முறையில் பொங்கலிட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அன்பு காட்டும் தமிழர்கள்:
இது குறித்து வெளிநாட்டினர் கூறும் போது, ‘‘தமிழ் மக்கள் எங்களிடம் மிகுந்த அன்பு காட்டுகின்றனர். இந்திய மக்கள் மிகவும் நெருங்கி பழகுகின்றனர். எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
மறக்க முடியாத பொங்கல்:
இந்த பொங்கல் விழா மிகவும் வித்தியாசமாக இருந்தது. இதனை வாழ்நாளில் மறக்க முடியாது'' என்று உற்சாகத்துடன் கூறினர். அதன்பிறகு அவர்கள் 48 பேரும், ஆட்டோக்களில் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.












Click it and Unblock the Notifications