குரங்கு போல மாடி விட்டு மாடி தாவிய இளைஞர்.. மடக்கிப் பிடித்த போலீஸ்.. விசாரணையில் மெளனம்
தூத்துக்குடி: கோவில்பட்டியில் இரவு நேரத்தில் குரங்கு போல் மாடிக்கு மாடி தாவி ஏறி திருட முயன்ற மர்ம மனிதரை போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மட்டுமல்லாது இரவு நேரத்திலும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்தன. இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் கோவில்பட்டி ஜோதிநகர் விநாயகர் கோவில் அருகே உள்ள வீட்டு மாடியில் மர்ம நபர் ஒருவர் ஏறி நின்றார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். பொது மக்கள் பார்த்து விட்டதை அறிந்த அந்த நபர் அருகில் இருந்த வீடுகளில் மாடியில் குரங்கு போல் தாவி தாவி ஓடினார்.
இதனைத் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் மாடியில் தாவி ஓடியவரை துரத்தி பிடிக்க முயன்றனர். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்களும் சேர்ந்து அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். போலீஸ் விசாரணை செய்த போது அந்த மர்ம நபர் எந்த வித பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தார். மேலும் அவர் வட மாநிலத்தை சேர்ந்தவரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர் எந்த ஊரை சேர்ந்தவர், பெயர் என்ன என்று எதுவும் கூறாமல் மவுனமாக இருந்து வருகிறார். அவரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்தனர். கோவில்பட்டி நகரில் இதுவரை நடந்த திருட்டு சம்பவங்களில் அவருக்கு தொடர்பு உண்டா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. நள்ளிரவில் வீட்டு மாடியில் குரங்கு போல தாவி ஓடிய வாலிபரால் அந்த பகுதி பெண்கள் பீதியடைந்துள்ளனர்.