தமிழக உரிமையை காவு கொடுக்க துடிக்கிறது பாஜக- ரயில் மறியலுக்கு ஆதரவு: வேல்முருகன்
சென்னை: தமிழக உரிமையை காவு கொடுக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு துடிக்கிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், வரும் 17, 18 ஆகிய தேதிகளில் விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் அறிவித்துள்ள ரயில் மறியல் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கும் என்றும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை நிராகரித்து தமிழகத்துக்கு துரோகம் இழைத்திருக்கிறது இந்திய மத்திய அரசு.
தற்போது நதிநீர் பங்கீட்டுக்கான தேசிய கட்டமைப்பு ஏற்படுத்தும் மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் போவதாகவும் மத்திய அரசு தெரிவித்து வருவது தமிழகத்துக்கு இழைக்கப்படும் மற்றொரு துரோகம். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றத் தீர்ப்பாக மதித்து செயல்பட வேண்டும் என்று பொதுப்பணித்துறை முன்னாள் அதிகாரிகள், முன்னாள் நீதிபதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் கர்நாடகா சட்டசபை தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற குறுகிய அரசியல் லாபத்துக்காக ஆயிரமாயிரம் ஆண்டுகாலமாக காவிரியில் தமிழகம் அனுபவித்து வரும் உரிமையை காவு கொடுக்க துடிக்கிறது இந்திய மத்திய பாஜக அரசு. இந்த மன்னிக்க முடியாத வரலாற்றுத் துரோகம் தமிழகத்தைக் கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்திய மத்திய அரசைக் கண்டித்து கடந்த 6-ந் தேதி எனது தலைமையில் சென்னை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பெருந்திரளாக பங்கேற்றனர்.
தற்போது இந்திய மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையிலும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் வரும் 17, 18 ஆகிய 2 நாட்கள் தமிழகம் தழுவிய தொடர் ரயில் மறியல் போராட்டத்துக்கு விவசாய சங்கங்கங்களின் கூட்டியக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த தொடர் மறியல் போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
விவசாய சங்கங்கள் முன்னெடுக்கும் இந்த தொடர் மறியல் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அனைத்து மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், தோழர்கள் முழு அளவில் பங்கேற்று இந்திய பாஜக மத்திய அரசுக்கு சரியான பாடத்தைப் புகட்டுவோம் என்று அன்புடன் அழைக்கிறேன்.
நமது வாழ்வுரிமைக்கான இப்போராட்டத்தில் கட்சி மாச்சரியங்களைக் கடந்து அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள் முழு அளவில் திரண்டு இந்திய மத்திய பாஜக அரசுக்கு நமது கண்டனத்தை தெரிவிப்போம் எனவும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.