நீட் தேர்வு சென்னை சிபிஎஸ்இ அலுவலகத்தில் வேல்முருகன் நடத்திய 3 மணி நேர உள்ளிருப்பு போராட்டம் நிறைவு
சென்னை அண்ணாநகரில் உள்ள சி.பி.எஸ்.இ. அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் 3 மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
Recommended Video

சென்னை: அண்ணாநகரில் உள்ள சி.பி.எஸ்.இ. அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் 3 மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து 3 மணி நேரத்திற்கு பின் வேல்முருகன் போராட்டத்தை கைவிட்டார்.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் போதுமான தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை.

இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்னை அண்ணாநகரில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
முன்னதாக தமிழக மாணவர்கள் தமிழகத்திலேயே தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேல்முருகன் தென்மண்டல சிபிஎஸ்இ இயக்குநரிடம் மனு அளித்தார்.
மேலும் வெளி மாநிலங்களில் தேர்வு எழுதும் மாணவர்களை விமானம் மூலம் அழைத்து செல்ல சிபிஎஸ்இ நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்தார்.
நீட் தேர்வு மையத்தை தமிழகத்திலேயே அமைக்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். வேல்முருகன் 3 மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் சிபிஎஸ்இ அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
3 மணி நேரத்திற்கு பின் போலீசாரின் கோரிக்கையை ஏற்ற வேல்முருகன் போராட்டத்தை கைவிட்டார். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் வேல்முருகன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications