தகிக்கும் வெயில்! தத்தளிக்கும் தவெகவினர்! ஆம்புலன்சில் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு
விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் போதிய தண்ணீர், உணவின்றி தொண்டர்கள் அவதியடைந்து வருகிறார்கள். இதனால் ஆம்புலன்ஸ் மூலம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று மாலை 4 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் தற்போது விக்கிரவாண்டியில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வெப்பத்தை தாங்க முடியாதவர்கள் அங்கிருக்கும் தொண்டர்கள் நாற்காலிகளை எடுத்து தலையில் போட்டுக் கொண்டு அமர்ந்துள்ளனர்.

மாலை 4 மணிக்கு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட மாநாட்டிற்கு காலை 6 மணிக்கே தொண்டர்கள் வந்துவிட்டனர். இதனால் நாற்காலி கிடைக்காமல் பலர் அவதியடைந்து வருகிறார்கள். உள்ளே கூட போக முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதுகிறது என்கிறார்கள்.
மாநாட்டுக்கு தேவையான தண்ணீர் வைக்கப்பட்டிருந்தாலும் அவை எல்லாம் தற்போது தீர்ந்துவிட்டது. இதனால் தண்ணீரின்றி தொண்டர்கள் தவித்து வருகிறார்கள். இந்த மாநாட்டில் உணவு வழங்கப்பட மாட்டாது என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் மாநாட்டுக்கு வருவோர் சாப்பிட்டுவிட்டு வருமாறும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.
எனினும் தொண்டர்களுக்கு வாட்டர் பாட்டில், ஸ்நாக்ஸ், பிஸ்கெட் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் 80-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்துவிட்டனர். இதையடுத்த அவர்கள் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அது போல் இங்கு அருகே உள்ள உணவகங்களில் உணவும் தீர்ந்துவிட்டதால் உணவு கிடைக்காமலும் தொண்டர்கள் அவதிப்படுகிறார்கள். வாகனங்களுக்கான பார்க்கிங் 4 கி.மீ. தொலைவு என்பதால் வாகனங்களை கொண்டு சென்று வி.சாலையை சுற்றியுள்ள இடத்தில் உணவு வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது போல் பெரும்பாலான தொண்டர்கள் வந்துவிட்டதாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் முன்கூட்டியே மாநாட்டை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது 4 மணிக்கு பதிலாக பிற்பகல் 2 அல்லது 3 மணிக்கே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.
விஜய்யும் மாநாட்டு திடலுக்கு வந்து அவருக்கான ஓய்வறையில் ஓய்வெடுத்து வருகிறார் என சொல்லப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.












Click it and Unblock the Notifications