வேட்டிக்குத் தடை விதித்த சென்னை கிரிக்கெட் கிளப்புக்குள் வேட்டி கட்டி நுழைய முயன்ற 40 பேர் கைது
சென்னை: வேட்டியில் வருவதற்குத் தடை விதித்துள்ள சென்னை கிரிக்கெட் கிளப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வேட்டி, சட்டை அணிந்து நுழையும் போராட்டத்தை நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேட்டி சட்டையில் கிரிக்கெட் கிளப்புக்குச் சென்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் வக்கீல்கள் தடுக்கப்பட்ட செயல் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிரிக்கெட் கிளப்பின் அறுதப் பழசான வெள்ளைக்காரன் காலத்து விதிமுறைகளுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இதற்கிடையே இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சேப்பாக்கம் கிரிக்கெட் சங்க கிளப்புக்குள் வேட்டி கட்டி நுழையும் போராட்டத்தை இன்று நடத்தினார்கள். கட்சியின் மாநில இணை பொதுச்செயலாளர் எம்.எஸ்.சண்முகம், துணை பொதுச்செயலாளர் சத்ரியன் வேணு கோபால், பொருளாளர் அக்ரம்கான், மாநில துணைத் தலைவர் வாசுதேவன், நிர்வாகிகள் முத்துராஜ், சரவணன், வீரராகவன், அப்துல்சதீக், கதிர்வேல், வெங்கடேசன் உள்பட 40 பேர் பங்கேற்றனர்.
அவர்கள் பாரம்பரிய உடையான வேட்டிக்கு தடை விதிப்பதா என்பது உள்ளிட்ட கண்டன வாசகங்களை எழுப்பினார்கள். பின்னர் கிரிக்கெட் கிளப்புக்குள் நுழைய ஊர்வலமாக புறப்பட்ட அவர்களை திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பீர் முகமது தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் வேட்டி-சட்டை அணிந்து காணப்பட்டனர். கைதான அனை வரையும் அண்ணா சாலையில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.