திருவள்ளூர்: ஓடும் ரெயிலில் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: 2 பேர் கைது
திருவள்ளூர்: திருவள்ளூரில் மின்சார ரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இரண்டு போதை ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம் அடுத்த பழனிப்பேட்டையை சேர்ந்தவர் தங்கவேலு. கூலித்தொழிலாளி. இவரது மனைவி சர்மிளா (22).
இருவரும் நேற்று மாலை ரெயில் மூலம் திருவள்ளூரில் உள்ள வீரராகவர் கோவிலுக்கு வந்தனர். பின்னர் திருவள்ளூர் தபால் நிலையம் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்.
இரவு 11 மணிக்கு திருவள்ளூர் ரயில் நிலையம் வந்து சென்னை-அரக்கோணம் ரெயிலில் ஏறி அரக்கோணம் புறப்பட்டனர். இவர்களை பின் தொடர்ந்த 2 போதை ஆசாமிகள் அதே பெட்டியில் ஏறினர். ஏகாட்டூர் ரெயில் நிலையம் வந்த போது அவர்கள் தங்கவேலுவை சரமாரியாக அடித்துவிட்டு சர்மிளாவை ரயிலில் இருந்து கீழே இழுத்து பலாத்காரம் செய்ய முயன்றனர்.
அதிர்ச்சி அடைந்த தங்கவேலுவும், சர்மிளாவும் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த போதை ஆசாமிகளை மடக்கி பிடித்தனர். தகவல் அறிந்த கடம்பத்தூர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் போதை ஆசாமிகள் இருவரும் திருவள்ளூர் பெரிய குப்பத்தை சேர்ந்த லாரன்ஸ், சாலமோன் என்று தெரிய வந்தது.
இரவு நேரங்களில் புறநகர் மின்சார ரயில்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.