ஓடும் காரில் ஏறி ‘மரண சாகசம்’ செய்த இளைஞர்கள்.. நெல்லையை பதற வைத்த சம்பவத்தில் 2 பேர் கைது
நெல்லை: நெல்லை அருகே நெடுஞ்சாலையில் காரின் மேலே அமர்ந்து சாகசத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கார் சாகசத்தில் ஈடுபட்ட மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும் பகுதி. இந்த சாலையில் குறிப்பாக திருநெல்வேலியில் தொடங்கி கன்னியாகுமரி மாவட்ட எல்லை வரையிலும் சில இடங்களில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.

இந்நிலையில் இந்த சாலையில் அதிகாலை நேரங்களில் இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் ரேஸ் செல்வதும், வாகனங்களில் சாகச பயணம் மேற்கொள்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆபத்தை உணராமல் மேற்கொள்ளப்படும் இந்த சாகச பயணங்களால் மற்ற வாகன ஓட்டிகள் ஒரு வித அச்சத்துடனேயே பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்மையில், இந்த நெடுஞ்சாலையில் சிலர் மேற்கொண்ட சாகச பயணம் சக வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. திருநெல்வேலி, கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையில் நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே உள்ள பானாங்குளம் கிராமத்தின் அருகில் சொகுசு கார் ஒன்று சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தது.
இந்த காரில் பயணம் செய்த இளைஞர்களில் 2 பேர் காரின் மீது அமர்ந்து செல்போன் பார்த்துக்கொண்டும் கைகளை உயர்த்தி ஆடிக்கொண்டும் இருந்தனர். காரின் உள்ளே டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர் தொடர்ந்து காரை வேகமாக ஓட்டிச் சென்றார்.
மேலும், அதே காரில் இருந்த இளைஞர்கள் இடது பக்க கதவை திறந்து வைத்து, கார் சென்று கொண்டு இருக்கும் போதே ஆடியபடி சென்றனர். வாகனங்கள் அதிவேகமாக செல்லும் நான்கு வழிச்சாலையில் இளைஞர்களின் இந்தப் பொறுப்பற்ற செயலைப் பார்த்து மற்ற வாகன ஓட்டிகள் பதறினர்.
அந்தக் காரின் பின்னால் சென்றவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அலட்சியமான பயணம் மேற்கொண்டவர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் அந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக கொண்டு காரின் பதிவெண்ணை வைத்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அந்த காரின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications