மேட்டூர்: விநாயகர் சிலை கரைத்த இருவரை வெள்ளம் அடித்துச் சென்றது… உடலை தேடும் பணி தீவிரம்
சேலம்: மேட்டூரில் விநாயகர் சிலையை கரைக்க ஆற்றில் இறங்கிய இரண்டு பேர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி சேலம் மாவட்டம் முழுவதும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த சிலைகள் மேட்டூர் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று கரைக்கப்பட்டு வருகிறது.
இதுபோல் சேலம் கொண்டலாம்பட்டி காட்டூரை சேர்ந்த முருகேசன் (வயது 25) நேற்று நண்பர்களுடன் விநாயகர் சிலைகளை கரைக்க மேட்டூர் அணைக்கு சென்றார். வெள்ளிப்பட்டறை தொழிலாளியான இவரும், அவருடன் சென்றவர்களும் விநாயகர் சிலைகளை மேட்டூர் அணைப்பகுதியில் கரைத்தனர்.
இதன் பின்னர் முருகேசனும், அவரது நண்பர்களும் குள்ளவீரம்பட்டி பகுதியில் உள்ள வாய்க்கால் பகுதிக்கு சென்று குளித்தனர். அப்போது முருகேசனை வெள்ளம் அடித்து சென்றது. இவரை பொதுமக்களும், அவரது நண்பர்களும் காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இதுபற்றி உடனே மேட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து முருகேசனின் உடலை தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும் அவரது உடலைத் தேடும்பணி நடந்து வருகிறது.
இதேபோல சேலம் இரும்பாலை அருகில் உள்ள காத்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27). இவரும், அவரது நண்பர்களும் இணைந்து விநாயகர் சிலைகளை கரைக்க மேச்சேரி அருகில் உள்ள கூனாண்டியூருக்கு சென்றனர்.
இங்கு இவர்கள் விநாயகர் சிலைகளை கரைத்தனர். இதன் பின்னர் இவர்கள் வேடுகாத்தாம்பட்டி பகுதியில் உள்ள ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது சுரேசை ஆற்று வெள்ளம் அடித்து சென்றது. இவரை அனைவரும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் தண்ணீரில்மூழ்கி இறந்து விட்டார். இவரது உடல் ஆற்றில் அடித்து சென்று விட்டது. இதுபற்றி மேச்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசின் உடலை தேடிவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications