மத்திய அரசு உதவியால் இரட்டை இலை சின்னம் கிடைத்ததா? முதல்வர் சொன்ன அந்த பதில்
Recommended Video

சென்னை: இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கு கிடைக்க பாஜகவுடன் இணக்கமாக உள்ளதுதான் காரணமா என்ற நிருபர்களின் கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார்.
தேர்தல் ஆணையத்திடமிருந்து இரட்டை இலை குறித்து உரிய அறிவிப்பு வெளியாகும் முன்பே, பிரஸ் மீட்டில், இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைத்துள்ளதாக அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி.
அப்போது மிகுந்த மகிழ்ச்சியாக காணப்பட்டார் முதல்வர்.

நிருபர்கள் கேள்வி
முதல்வரிடம், பாஜகவிடம் உங்கள் அணியினர் இணக்கமாக இருப்பதால், இந்த சின்னம் பிரச்சினையில் உங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதாக பார்க்கிறீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசு பின்னணியில் இல்லை
அப்போது பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இரட்டை இலை சின்னம் கிடைத்ததன் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக நீங்கள் கூறுவது தவறான கருத்து. தேர்தல் கமிஷனிடம் வழக்கு நடைபெற்றது. தேர்தல் கமிஷன் கேட்ட தகுந்த விளக்கங்களை அளித்தோம். தேவைப்படும் ஆதாரங்களை ஒப்படைத்த காரணத்தால்தான் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

காரணம் இதுதான்
90 சதவீத நிர்வாகிகள் எங்கள் பக்கம் இருந்தனர். எம்.பி, எம்எல்ஏக்கள் எல்லோரும் எங்கள் பக்கம் இருந்தனர். எனவேதான் தீர்ப்பு எங்கள் பக்கம் வந்துள்ளது. இன்றைய தினம் தேர்தல் ஆணையம் சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. எல்லாம் வல்ல இறைவன் ஆசியோடு நியாயத்தின் பக்கம் தீர்ப்பு கிடைத்துள்ளது.

ஆவணங்கள் சமர்ப்பிப்பு
தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. எங்கள் தரப்பிலிருந்து ஏகப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்தோம். தீவிர விசாரணைக்கு பிறகே தீர்ப்பு வெளியாகியுள்ளது என்றார்.

மோடியால் கிடைத்தது
இதனிடையே, தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில், முதல்வருக்கு மட்டும் முதலிலேயே எப்படி தீர்ப்பு விவரம் தெரியவந்தது? இரட்டை இலை சின்னம் மோடியால் திரும்ப கிடைக்கும் என்று அமைச்சர் ஒருவர் ஏற்கனவே கூறியிருந்தார். அவர்களுக்கு சின்னம் கிடைத்தால் அது உண்மையாகியுள்ளது என்பதே அர்த்தம் என்றார்.












Click it and Unblock the Notifications