'ஜெயக்குமார் தவிர இன்னும் இருவர் இருக்கிறார்கள்' - வெற்றிவேல்
நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம்.
தினத்தந்தி - வெற்றிவேல் புதிய தகவல்
அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பாக ஆடியோ வெளியாகி சர்சையைக் கிளம்பியுள்ள நிலையில், "ஜெயக்குமாரை தவிர இன்னும் இரண்டு பேரும் இருக்கிறார்கள். அவர்கள் பெயரை இப்போது சொல்ல முடியாது," என்று தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவருமான வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
"குழந்தையின் டி.என்.ஏ.வையும், ஜெயக்குமார் டி.என்.ஏ.வையும் எடுத்து பார்த்தால் உண்மை தெரிந்துவிடும்," என்று அவர் கூறியுள்ளதாக தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.
அதில் உள்ள குரல் தன்னுடையதல்ல என்று ஜெயக்குமார் ஏற்கனவே மறுத்துள்ளார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - ராஜஸ்தானில் மாயமான மலைகள்
சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளால் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஆரவல்லி மலைத்தொடரின் 128 மலைக் குன்றுகளில், 30க்கும் மேலான குன்றுகள் மாயமாகியுள்ளதாக ஃபாரஸ்ட் சர்வே ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக இயங்கும் சுரங்கங்கள் அனைத்தையும் 48 மணிநேரத்துக்குள் மூடுமாறு ராஜஸ்தான் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று டெல்லியிலிருந்து வெளியாகும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
’தி இந்து’ - சபரிமலை தீர்ப்பு மீதான மறு ஆய்வு மனுக்கள்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைய அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் நவம்பர் 13 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
முன்னதாக அந்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
தினமணி - வாராக்கடன் பிரச்சனை
வங்கிகள் வாராக்கடன் பிரச்சனையில் சிக்கும்போது இந்திய ரிசர்வ் வங்கி என்ன செய்து கொண்டிருந்தது என்றும் அதன் பொறுப்பு என்னவென்றும் மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் கேள்வி எழுப்பியுள்ளதாக தினமணி செய்தி தெரிவிக்கிறது.
2017-18 நிதியாண்டின்படி இந்திய வங்கிகளின் வாராக்கடன் 9.61 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
பிற செய்திகள்:
- 'ஜமால் கஷோக்ஜி கொலைக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்' - டிரம்ப்
- 2400 ஆண்டுகளாக கடலுக்கடியில் இருந்த கிரேக்க வர்த்தகக் கப்பல்
- அமெரிக்காவில் வேகமாக வளரும் இந்திய மொழி எது?
- ரயில் விபத்து: காணாமல் போன குழந்தை தாயுடன் சேர்ந்த தருணம்