சிங்கள படையினர் துரத்தியதில் கடலில் விழுந்த 2 ராமேஸ்வரம் மீனவர்கள்- 30 பேர் சிறை பிடிப்பு
ராமேஸ்வரம்: சிங்களக் கடற்படையினர் துரத்தி வந்ததால் பயந்து போன ராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்து பேர் கடலில் படகோடு கவிழ்ந்து விழுந்தனர்.
இதில் 2 பேர் கடலில் மூழ்கி விட்டனர். 3 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

காயமடைந்த மீனவர்கள் தப்பி வந்து மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கடலில் மூழ்கிய இரு மீனவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர்கள் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் உயிரிழந்திருப்பார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த மீனவர்கள் நடந்த சம்பவம் குறித்துக் கூறுகையில், சிங்களக் கடற்படையினர் எங்களது படகில் மோதுவது போல துரத்தி வந்தனர். மேலும் கல்வீச்சிலும் ஈடுபட்டார்கள். படகிலும் அவர்களது படகை வைத்து மோதினர். மீன்பிடி வலைகளையும் அறுத்து எறிந்து விட்டனர் என்றார்.
30 மீனவர்கள் சிறைபிடிப்பு
இதற்கிடையே, ராமேஸ்வரம், புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 30 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்ற தகவல் வெளியாகி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 17 மீனவர்கள் 4 விசைப்படகுகளில் இந்திய கடல் எல்லையில் இன்று அதிகாலை மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது இலங்கை கடற்படைக்கு சொந்தமான 3 குட்டி ரோந்து கப்பல்கள் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தது. பதட்டம் அடைந்த மீனவர்கள் வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனால் அவர்களின் படகுகளில் தாவிக்குதித்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கியதோடு அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களை பறித்துகொண்டனர்.
மீனவர்கள் 17 பேரையும் சிறை பிடித்தனர். பின்னர் 4 படகுகளுடன் மீனவர்களை இலங்கைக்கு அழைத்து சென்றனர். அங்குள்ள காங்கேசன்துறை துறைமுகத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் வைத்து மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதேபோல,ராமேஸ்வரத்தில் இருந்து 69 விசைப்படகுகளில் நேற்று காலை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். தங்கச்சிமடத்தை சேர்ந்த டிக்ளஸ் என்பவரது விசைப்படகில், வினோதன், ஆரோக்கியநாதன், மரியான், ஆபி ரகாம், கிளாசியஸ் உள்பட 13 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 13 மீனவர்களையும் சிறை பிடித்து சென்றுள்ளனர். இதனால் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.












Click it and Unblock the Notifications