செம்மரக் கடத்தல் வழக்கில் கைதான 2 தமிழர்கள் ஆந்திர சிறையில் மர்ம மரணம்... போலீசாரின் சித்ரவதை காரணமா
சென்னை: செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆந்திரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு தமிழர்கள் அடுத்தடுத்து உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர போலீசாரின் சித்ரவதை காரணமாகவே அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டச் சென்றதாகக் கூறி தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரை அம்மாநில போலீசார் மனிதாபிமானம் இன்றி சுட்டுக் கொன்றார்கள். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதேபோல், செம்மரம் கடத்தியதாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்தத் தமிழர்கள் எல்லாம் பல மாதங்களாக எந்தவிதமான விசாரணையும் இல்லாமல் சிறையிலேயே வாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் திருப்பதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் கடந்த வாரம் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதேபோல், செங்கம் அருகே உள்ள நீப்பத்துறை இருளர் காலனியைச் சேர்ந்த ரத்தினம் என்பவரும் கடந்த 18ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு கடப்பா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரத்தினம் வயிற்று வலியால் அவதிப்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் ஆந்திர போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், லோகநாதன் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், உயிரிழந்த தமிழர்கள் இருவரும் ஆந்திர போலீசாரின் சித்ரவதையால் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு மரணமடைந்ததாக அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இவர்களது மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். கடிதம் எழுதியதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதாகக் கருதாமல், அமைச்சரவையில் உள்ள இரண்டு மூத்த அமைச்சர்களை உடனடியாக ஆந்திராவுக்கு அனுப்பி, ஆந்திர முதலமைச்சரோடு இதைப் பற்றி விரிவாகப் பேசி, ஆந்திராவில் சிறையிலே உள்ள தமிழகத் தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாக இல்லம் திரும்புவதற்கான முயற்சியிலே தமிழக அரசு ஈடுபட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.