நீலகிரியில் கனமழை: மரம் விழுந்து 2 பெண்கள் பலி... இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கனமழை காரணமாக மரம் விழுந்து தேயிலை பறித்துக்கொண்டிருந்த 2 பெண்கள் உயிரிழந்தனர். ஒரு பெண் காயம் அடைந்தார்.
3வது நாளாக தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக நீலகிரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குன்னூரில் 16 இடங்களில் சிறு மண் சரிவுகளும், சாலைகளில் மரங்கள் விழுவதாலும் சாலை போக்குவரத்து அவ்வப்போது துண்டிக்கப்படுவதும், பிறகு சீரடைவதுமாக உள்ளது.
கடந்த இரண்டு நாட்களை விட, இன்று மழை வலுத்துள்ளது. இந்த நிலையில்,மழை மேலும் 24 மணி நேரத்துக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முடங்கிய சுற்றுலா பயணிகள்
கோடை சீசனை முன்னிட்டு உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள் இந்த மழையால் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். தொடர் மழையால் உதகை படகு இல்லத்தில் உள்ள மிதி படகுகள் மற்றும் துடுப்பு படகுகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாது காப்பை கருதி மிதி படகுகள், துடுப்பு படகுகள் இயக்கப்பட வில்லை. மோட்டார் படகுகள் மட்டும் இயக்கப்பட்டது.

மின்தடை
மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதோடு பலத்த காற்றும் வீசி வருவதால், உதகை - கூடலூர் சாலையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையோர மரங்கள் விழும் அபாயத்தில் உள்ளன. தொடர்ந்து அவ்வப்போது மரங்கள் மின் கம்பிகளின் மீது உரசுவதால் தொடர்ந்து அவ்வப்போது மின் தடை ஏற்பட்டு வருகிறது.

2 பெண்கள் பலி
மழை காரணமாக கூடலூர், கொலப்பள்ளி அருகே நெல்லியாளத்தில் மரம் முறிந்து விழுந்தது. இதில் தேயிலை பறித்துக்கொண்டிருந்த 2 பெண்கள் சிக்கி பலியாகினார். மேலும், ஒரு பெண் காயம் அடைந்தார். காயம் அடைந்த பெண் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

வெறிச்சோடிய உதகை
உதகையில் கன மழை மற்றும் கடுமையான குளிர் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தங்களது ஊர்களுக்குக் கிளம்பிவிட்டனர். இதனால் கோடை விடுமுறை சீசனில் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும் ஊட்டி வெறிச்சோடி காணப்படுகிறது.

கண்காட்சிகள் பாதிப்பு
நாளை காலை துவங்க இருந்த நாய்கள் கண்காட்சிக்காக ஏராளமான நாய்கள் வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வரவழைக்கப்பட்டுள்ளது. பல நாய்கள் ஒவ்வொன்றும் ரூ.25 லட்சம் மதிப்புடையவை என்று கூறப்படுகிறது.

ரோஜா மலர்கள் பாதிப்பு
மேலும், ரோஜா கண்காட்சிக்கு ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், மழை மற்றும் கடுமையான காற்று வீசுவதால், மலர்கள் கொட்டிவிட்டன. இதனால், மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ரயில் சேவை ரத்து
உதகை - குன்னூர் மலை ரயில் பாதையில் தண்டவாளம் மீது மரம் விழுந்ததில் தண்டவாளம் சேதமடைந்துள்ளது. இதனால் உதகை - குன்னுர் மலைப்பாதையில் ரயில் சேவை 2 நாட்களுக்கும், குன்னூர் - மேட்டுப்பாளையம் ரயில் சேவை ஒரு நாளைக்கும் நிறுத்தப்பட்டுள்ளது.
தண்டவாளத்தை சீர் செய்யும் பணி நிறைவடைந்த பிறகு மீண்டும் ஊட்டி மலை ரயில் சேவை இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

கொட்டித் தீர்த்த மழை
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 643 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக குன்னூரில் 84 மில்லி மீட்டரும், கோத்தகிரியில் 75 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications