உதகையில் செந்நிறமாக மாறிய ஏரி நீர்: அதிர்ச்சியில் கிராமமக்கள்
நீலகிரி: பேய் படங்களிலும், மாயாஜால படங்களிலும்தான் தண்ணீரை ரத்தம் போல மாற்றுவார்கள். ஆனால் ஒரு ஏரி நீரே ரத்தமானால் அதை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியும் மயக்கமும்தானே வரும். உதகையில் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உதகமண்டலம் அருகே, செந்நிறமாக மாறிய ஏரி நீரால், சுற்று வட்டார கிராம மக்கள் பீதியடைந்துஉள்ளனர். இது தொடர்பாக வருவாய்த்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தாவரவியல் துறையைச் சேர்ந்த 20 பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஏரி பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து, கூடலுார் செல்லும் சாலையில், பைகாரா அருகே அமைந்துள்ளது டி.ஆர்., பஜார். சோலைக்காடுகளில் உற்பத்தியாகும் தண்ணீரும், மழைநீரும் சேகரமாகும் ஏரி இங்குள்ளது.
குடி தண்ணீருக்காக கிளன்மார்கன் வழியாக கொண்டு செல்லப்படும், இந்த ஏரி தண்ணீர், மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள், இந்த ஏரி தண்ணீரை, குடிநீராக பயன்படுத்திவருகின்றனர். வன விலங்குகளின் தாகம் தணிக்கவும் ஏரி நீர் பயன்படுகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதிக்கு சென்ற கிராமவாசிகள் சிலர், ஏரி நீர், செந்நிறத்துக்கு மாறியிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தகவல் அளித்தனர். இந்த ஏரி நீர், இதுவரை இப்படி நிறம் மாறியது இல்லை. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர், உடனே ஆய்வு நடத்தி, நீர் நிறம் மாறியதற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும்' மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சில இடங்களில், நீர் நிலைகளை சுற்றி, சீகை மரங்கள் வளர்ந்து இருக்கும். முதிர்ந்த சீகை மரங்களின் வேர் பகுதியில் இருந்து, ஒரு பசை போன்ற திரவம் வழிந்து, நீர் நிலைகளில் கலக்கும்; அப்போது அந்த நீர் சிவப்பு நிறமாக மாறும் என்று கூறியுள்ளார் மாவட்ட வன அலுவலர் பத்ரசாமி.
இதனால், அங்குள்ள மண்ணில், அமிலத்தன்மை அதிகரித்து, மண் வளம் கெடும். எனவே, பழமை வாய்ந்த சீகை மரங்களை வெட்டி அப்புறப்படுத்த, திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு அனுப்பியுள்ளோம். அனுமதி கிடைத்ததும், பழமையான சீகை மரங்கள் வெட்டி அகற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிகாரிகள் ஆய்வு
இதனிடையே ஏரி நீர் செந்நிறமாக மாறியது தொடர்பாக வருவாய்த்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தாவரவியல் துறையைச் சேர்ந்த 20 பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஏரி பகுதியில் ஆய்வு நடத்தியுள்ளனர். அவர்கள் அளிக்கும் அறிக்கைக்கு பின்னரே ஏரி நிறம் மாறியதற்கான காரணம் தெரியவரும்.












Click it and Unblock the Notifications