உடன்குடி அனல் மின் நிலையத்துக்கு புதிய ஒப்பந்தப்புள்ளி: தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு!
சென்னை: உடன்குடியில் புதிய அனல் மின் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் புதிய அறிவிப்புக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதுதொடர்பாக சதர்ன் சென்ட்ரல் சீன பவர் எனர்ஜி டிசைனிங் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு மின்சார உற்பத்தி, மின் பகிர்மானக் கழகம் ஒப்பந்தப் புள்ளி கோரி அறிவிப்பு வெளியிட்டது. இதில், எங்கள் நிறுவனம் பங்கேற்று, மிகக் குறைந்த தொகையில் ஒப்பந்தப் புள்ளி கோரியது.

ஆனால் எங்கள் நிறுவனம் கோரிய ஒப்பந்த ஆவணங்களில் குறைபாடு இருப்பதாகக் கூறி மின் பகிர்மானக் கழகம் நிராகரித்தது. ஆனால், இதே தொகையை குறிப்பிட்டு எங்கள் நிறுவனம் எண்ணூர் அனல் மின் நிலையத் திட்டத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரி விண்ணப்பித்தது. அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
எனவே உடன்குடி அனல் மின் நிலைய திட்டத்துக்கு புதிதாக ஒப்பந்தப் புள்ளி கோருவதற்கு மின் உற்பத்தி பகிர்மானக் கழகத்துக்குத் தடை விதிக்க வேண்டும். மீண்டும் எங்களுக்கு ஒப்பந்தம் வழங்க பகிர்மானக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. புதிய ஒப்பந்தப் புள்ளி கோருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இந்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications