குற்றால அருவியில் குளித்த பெண்களை அலற விட்ட உடும்பு...!
குற்றாலம்: குற்றாலத்தில் பிரதான அருவியில் குளித்துக்கொண்டிருந்த பெண்கள் மீது உடும்பு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் அருவிகளில் பரவலாக தண்ணீர் கொட்டுகிறது.
இதனால் ஏராளமான பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் குற்றால அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர். நேற்று மாலையும் வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது பெண்கள் குளிக்கும் பகுதியில் திடீரென உடும்பு விழுந்தது. இதனால் பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பெட்டகம் நடத்தி வரும் வெங்கடேஷ் என்பவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறை யினர் விரைந்து வந்து அருவி பாலத்துக்கு அருகே கிடந்த உடும்பை பிடித்து சென்று மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் விட்டனர்.
அருவியில் ஆனந்தமாய் குளித்துக்கொண்டிருந்த பெண்கள் மீது உடும்பு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.