பாலேஸ்வரம் முதியோர் இல்லத்தில் பாதாள பிணவறை... தோண்டத் தோண்ட கிளம்பும் திடுக் தகவல்கள்!
பாலேஸ்வரம் முதியோர் இல்லத்தில் பாதாள பிணவறை இருப்பது கடந்த 3 நாட்களாக அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளது.
Recommended Video
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட பாலேஸ்வரத்தில் இயங்கி வந்த முதியோர் காப்பகத்தில் இறந்தவர்களின் உடல்களில் இருந்து எலும்புகள் எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் இரண்டாவது நாளாக 200 பேர் முதியோர் இல்லத்தில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொடர் சோதனையில் முதியோர் இல்லத்திற்குள் பாதாள பிணவறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான ஆதரவற்றோர் காப்பகத்தில் தினந்தோறும் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகிக்கொண்டிருக்கிறது. ஆதவற்றோருக்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறி இங்கே தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சரியான உணவு மற்றும் பராமரிப்பு இல்லாமல் இருப்பதோடு அவர்களை வெளியில் விடவும் நிர்வாகம் மறுப்பது தெரிய வந்தது.
கடந்த 20ம் தேதி காப்பகத்திற்கு சொந்தமான வாகனத்தில் பிணத்துடன் மூதாட்டி ஒருவர் சென்ற போது கூச்சலிட்டதால் பொதுமக்கள் வாகனத்தை மறித்து மூதாட்டியை மீட்டதால் உண்மை விஷயங்கள் தெரிய வந்துள்ளது. மூதாட்டி அளித்த தகவலின் அடிப்படையில் முதியோர் இல்ல மர்மங்கள் அதிகாரிகளின் விசாரணையில் வெளிவரத் தொடங்கியுள்ளது.
கோட்டாட்சியர் விசாரணை
முதியோர் இல்லம் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்த நிலையில் கோட்டாட்சியர் ராஜிவ் தலைமையில் நேற்று திடீர் சோதனை நடத்தப்பட்டது. காப்பகத்தின் உரிமையாளர் தாமஸிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இன்றும் 200 முதியோர் இடமாற்றம்
அதிகாரிகள் விசாரணையின் போது காப்பகத்தில் தங்க விரும்பாத 86 பேர் வேறு முதியோர் காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் 2வது நாளாக இன்றும் அதிகாரிகளின் சோதனை தொடர்கிறது, இன்றும் சுமார் 200 முதியோர்கள் வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
லாக்கர் அமைப்பில் பிணவறை
அதிகாரிகளின் சோதனையில் ஆதரவற்றோர் காப்பகத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு விநோதமான முறை கடைபிடிக்கப்படுவதே காப்பகத்தை இழுத்து மூட காரணமாக அமைந்துள்ளது. சுகாதாரத்துறையின் அனுமதி இல்லாமல் லாக்கர் போன்ற வடிவமைப்பில் சிமென்ட் கல்லறைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளனர்.
மர்மம் விலகவில்லை
லாக்கர் போன்ற வடிவமைப்பில் உள்ள பொந்துகளில் இறந்தவர்களின் உடல்களை போட்டு மூடி வைத்துவிடுகின்றனர். இறந்தவர்களின் உடல் சதை அழுகி குழியில் விழும் வகையில் அறை அமைக்கப்பட்டுள்ளது, மிஞ்சும் எலும்புப் கூடை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக தெரிகிறது. எதற்காக பிணவறையை தயாரித்தனர் என்பது இன்னும் விலகாத மர்மமாகவே உள்ளது.