வீடுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை 10ஆக குறைக்கப்பட வாய்ப்பு
டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் மானிய விலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களை 10 ஆக குறைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மக்களவையில் 2016-2017ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேசட்லி இன்று தாக்கல் செய்தார். அரசு எண்ணெய் நிறுவனங்கள் மூலம் ஒரு வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு தோறும் மானிய விலையில் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டு ஜனவரி மாத நிலவரப்படி 6.19 கோடி வாடிக்கையாளர்கள் கேஸ் சிலிண்டர் மானியம் பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 238 மானியம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கை 12லிருந்து 10 ஆக குறைப்பதற்கு பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது மானிய எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 6 ஆகக் குறைக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததையடுத்து, அடுத்த ஜனவரி மாதம் 9 ஆக உயர்த்தப்பட்டது. ஆட்சி முடியும் தருவாயில் 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் திங்கள்கிழமை (பிப்ரவரி 29) ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் நிதிநிலை அறிக்கையில், மானிய கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.