வக்பு சட்டத்தை குப்பை தொட்டியில் வீசுங்க.. ஏப்ரல் 26-ல் 3 நகரங்களில் மதிமுக போராட்டம்- வைகோ சீற்றம்!
சென்னை: மத்திய பாஜக அரசின் வக்பு சட்டத்தை குப்பைத் தொட்டியில்தான் வீச வேண்டும்; வக்பு சட்டத்துக்கு எதிராக வரும் 26-ந் தேதி மதுரை, கோவை மற்றும் சென்னையில் மதிமுகவினர் போராட்டம் நடத்துவர் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
சென்னையில் மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வக்ஃபு சட்டத்திருத்த மசோதா, அரசியலமைப்பை நீர்த்துப்போகச் செய்தல், சிறுபான்மைச் சமூகங்களை அவதூறு செய்தல், இந்திய சமூகத்தைப் பிரித்தல் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறித்தல் ஆகிய நான்கு கூறுகளை முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. எனவே இது, அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் மீதான தாக்குதல்; கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல் ஆகும்.

இந்த மசோதாவின் பிரிவு 3இன்படி, சிறுபான்மையினர் இப்போது தங்கள் மத அடையாளத்தை சான்றிதழ்களுடன் நிரூபிக்க கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். நாளை, மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களும் இதைச் செய்ய நிர்பந்திக்கப்படுவார்கள்.
இது அரசியலமைப்பின் 26ஆவது பிரிவுக்கு எதிரானது. இன்று சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டுள்ளார்கள். நாளை மற்றவர்கள் குறிவைக்கப்படலாம்.
வக்ஃபு சட்ட திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் சரமாரியாக ஒன்றிய அரசிடம் கேள்விகளை எழுப்பி உள்ளது.
இந்திய நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தாக்குதல் தொடுக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு முத்தலாக் தடை சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றை நிறைவேற்றியது. அந்த வரிசையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃபு திருத்தச் சட்டம் நாட்டின் பன்முகத்தன்மைக்கும் அரசியல் சட்டத்தின் தனி மனித உரிமைக்கும் சவால் விடுகிறது.
இச் சட்டத்தை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடி முறியடிக்க வேண்டும் என்று மதிமுக நிர்வாக குழு அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் கேட்டுக்கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
#WATCH | Chennai, Tamil Nadu | On Waqf (Amendment) Act, MDMK MP Vaiko says, "It is undemocratic and anti-secular. It should be thrown in the dustbin..." pic.twitter.com/OD3bkpZneq
— ANI (@ANI) April 20, 2025
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வக்பு சட்டம் ஜனநாயக விரோதமானது; மதச்சார்பின்மைக்கு எதிரானது; இந்த சட்டத்தைக் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசி எறிய வேண்டும். ஏப்ரல் 26-ந் தேதி மதுரை, சென்னை மற்றும் கோவையில் வக்பு சட்டத்துக்கு எதிராக மதிமுக போராட்டம் நடத்தும் என்றார்.












Click it and Unblock the Notifications