பாஜக தலைவர் தமிழிசை வீட்டின் முன்பு பட்டாசு ஓசை.. கொளுத்தியது யார்.. தேடும் போலீஸ்!
சென்னை: தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் வீட்டின் முன்னால் பட்டாசுகளைக் கொளுத்தி விட்டுச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விருகம்பாக்கத்தில் உள்ள லோகையா காலனியில் வசித்து வருகிறார். நேற்று மதியம் 2 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் தமிழிசை சவுந்தரராஜன் வீட்டின் முன்பு பட்டாசுகளை கொளுத்தி விட்டு சென்றுவிட்டனர்.

பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். ஆனால் அங்கு யாரும் இல்லை. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு கிடந்த 129 ஆவது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் செந்தில்பாண்டியின் விசிட்டிங்கார்டில் உள்ள செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டனர்.
அவர் ஸ்ரீரங்கத்தில் இருப்பதாகவும், இதில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினார். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் உருவம் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள்.
அனேகமாக ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் யாராவது வந்து பட்டாசு போட்டு விட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. நேற்றுதான் டெல்லியில் வாக்கு எண்ணிக்கை நடந்து, அதில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று, பாஜக படுதோல்வியைச் சந்தித்தது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications