சென்னையில் பரபரப்பு.. போலீஸ்காரரிடமே செல்போன் பறிக்க முயற்சி.. தடுத்தபோது கத்தி குத்து
Recommended Video
சென்னை: சென்னை தாம்பரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஆயுதப்படை போலீசாரிடம் கத்தியால் குத்தி செல்போன் பறிக்க முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூர் காவல் நிலைய எல்லைப் பகுதியில் வசிப்பவர் ஞானசேகர். இவர் பரங்கிமலை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணிபுரிகிறார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடிந்து செல்போன் பேசியபடி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியே வந்த மர்ம நபர் ஒருவர் ஞானசேகரிடமிருந்து செல்போன் பறிக்க முயன்றுள்ளார். ஞானசேகர் விடாமல் தடுத்துள்ளதால், அந்த நபர் தப்பிச்சென்றுள்ளார். இதையடுத்து, காவலர் ஞானசேகர் அந்த மர்ம நபரைத் தொடர்ந்து விரட்டிச் சென்றுள்ளார். அப்போது அந்த மர்ம நபர் காவலர் ஞானசேகரைக் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காவலர் ஞானசேகர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போலீஸ்காரரிடமே செல்போன் பறிக்க முயன்றதோடு கத்தியால் தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சேலையூர் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.